சமஸ்கிருத மொழி வார விழாவுக்கு எதிர்ப்பு: ஜெ.வை பாராட்டிய திருமா
சென்னை: சமஸ்கிருத மொழி வார கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் ஜனநாயகம் இல்லை என்பதற்கான சம்பவங்கள் நடந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காஞ்சிபுரம் மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, ''மத்திய அரசு சமஸ்கிருத மொழி வாரம் கொண்டு வருதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வரை பாராட்டுகிறோம்.
பதவி விலக வேண்டும்
தெலங்கானாவில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளிக்கூட பஸ் மீது ரயில் மோதியதில் மாணவ-மாணவிகள் பலியான சம்பவம் ரயில்வே துறையின் அலட்சியத்தின் காரணமாக நடந்துள்ளது. இந்த விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா உடனடியாக பதவி விலக வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டில் காவலர்களை நியமிக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் ஜனநாயகம்
தமிழக சட்டசபையில் ஜனநாயகம் இல்லை என்பதற்கான சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள தி.மு.க உறுப்பினர்களை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.
கல்வி உரிமை மாநாடு
ஆகஸ்ட் 17 ஆம் தேதி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் கல்வி உரிமை மாநாடு நடைபெறுகிறது. இதில் பேராசிரியர்கள், கல்லூரி, பள்ளி, மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஆதிதிராவிடர் பள்ளிகள்
இந்திய அரசு கல்விக்கு 25 சதவீதம் நிதியை ஒதுக்க வேண்டும், தமிழகத்தில் மோசமான நிலைமையில் உள்ள ஆதிதிராவிட பள்ளிகளை சீரமைக்க வேண்டும், தமிழகத்தில் மழலையர் பள்ளி முதல் ஆரம்ப பள்ளியில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்க வேண்டும்" என்றார்.