ராகுலை காவல் நிலையத்தில் காத்திருக்க வைப்பதா? திருநாவுக்கரசர் கண்டனம்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு சில மணிநேரம் கழித்து விடுவிக்கப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் ராணுவ வீரர் உடலை பார்க்கச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்ததற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் ராணுவ வீரர் ராம்கிஷன் கிரேவால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோக நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத்தை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி வழங்கிய மோடி, பதவியேற்ற பிறகு அதை நிறைவேற்றவில்லை.
இதை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த காலங்களில் இத்தகைய போராட்டங்களில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றியிருக்கிறார்.
டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட பிறகு அவரது உடல் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த செய்தி கேட்டதும், உடனடியாக ராகுல்காந்தி மருத்துவமனைக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முற்பட்டார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, சட்ட விரோதமாக காவலில் வைத்து விட்டனர். சில மணி நேரங்கள் கழித்து தான் அவர் விடுவிக்கப்பட்டார். இத்தகைய செயல்கள் மூலம் மத்திய பாரதீய ஜனதா அரசு அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளது. நமது நாட்டில் குடியாட்சி நடக்கிறதா? சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என்ற கேள்வி தான் எழுகிறது. மத்திய அரசின் இந்த செயலை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.