முழுக்க முழுக்க பணம் விளையாடி, ஜனநாயகத்தை கேவலப்படுத்திய தேர்தல் இது!!
Recommended Video
சென்னை: டிடிவி தினகரன் ஜெயித்தால், அதை நினைத்து ஒரு பெர்சன்ட் கூட மக்கள் சந்தோஷப்படக் கூடாது என்பதுதான் ஆர்.கே.நகரிலிருந்து பொதுமக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக இருக்க முடியும். அதை விட முக்கியாக, எதிர்காலத்தில் மக்கள், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களைப் போல நடக்கக் கூடாது என்பதற்கும் இது நல்ல பாடமாக அமையும்.
மோசமான குழந்தை, நல்ல குழந்தை என்று சொல்வார்கள் இல்லையா. அது போலத்தான், இப்போது ஆர்.கே.நகர் வாக்காளர்கள் மோசமான குழந்தையாக மாறி நிற்கின்றனர். ஏன் தினகரனை அவர்கள் தேர்வு செய்தார்கள் என்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் இருக்க முடியம் என்பது தெரியவில்லை.
ஆனால் ஆர்.கே.நகரை விட்டு விலகி நின்று பார்த்தோமானால் காசு பணம் துட்டு மணி மணி என்ற பாட்டுதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பணம் விளையாடி விட்டது.
வரலாறு காணாத அளவு பணம்
முதல் முறையாக இந்த இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே வரலாறு காணாத அளவுக்கு பணம் விளையாடியது. அதிமுக தரப்பு பணத்தைக் கொட்டிக் குவித்தது. அப்போது ஆளும் அதிமுக சார்பாக நின்றவர் தினகரன். ஸோ, யார் பணம் கொடுத்திருப்பார் என்பதை பச்சைக் குழந்தை கூட பளிச்சென சொல்லி விடும்
தேர்தலை நிறுத்தவில்லை.
பின்னர் 2வது முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இப்போதும் அதே வேட்பாளர்கள்தான். தேர்தல் ஆணையும் யாரையும் கண்டுகொள்ளவில்லை. இந்த முறையும் அதே பணப் பட்டுவாடா புகார்கள் குவிந்தன. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த முறை தேர்தலை நிறுத்தவில்லை.
வாரி வாரி குவிந்த பணம்
வாக்காளர்களுக்கு பணத்தைக் கொடுத்து குவித்து விட்டனர் பலம் வாய்ந்த வேட்பாளர்கள் என அடுத்தடுத்து புகார்கள். யாரும் கண்டு கொள்ளவில்லை. தினகரன் தரப்பும் சரி, அதிமுகவும் சரி மாறி மாறி பணம் கொடுத்ததாக அங்கிருந்து தகவல்கள் சரமாரியாக பறந்தன.
வாக்காளர்களுக்கும் வெட்கம் இல்லை
அதை விட முக்கியமாக இந்தப் பணத்தை வாங்குவதற்கு வாக்காளர்களும் வெட்கப்பட்டது போலத் தெரியவில்லை. கொடுத்ததையெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டனர். இது வாக்குப் பதிவு நாளன்று நன்றாகவே வெளிப்பட்டது. விழுந்து விழுந்து வாக்குகளைக் குவித்து விட்டனர்.
தினகரனிடம் என்ன இருக்கு
இந்தத் தேர்தலில் தினகரனை அத்தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்பது புரியவில்லை. அவரிடம் கொள்கை இல்லை, கோட்பாடு இல்லை, கட்சி இல்லை, அவர் மீது உள்ள அனைத்துமே ஊழல் புகார்கள் மட்டுமே. இப்படிப்பட்டவரை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் வேறு என்ன காரணமாக இருக்க முடியும். பணம், பணத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஜனநாயகமா பண நாயகமா
மொத்தத்தில் இது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி பண பலத்தை நிரூபித்த இடைத் தேர்தல். திருமங்கலம் பார்முலாவை மிஞ்சிய மோசமான பார்முலா தான ஆர்.கே.நகர் பார்முலா..!
இது மக்களுக்கு ஆபத்தானது!