பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் தேர் பவனி.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சென்னை: சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் வருடாந்திர தேர் பவனி விழா சிறப்பாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையை தரிசித்து அருள் பெற்றனர்.
சென்னை பெசன்ட்நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 42-வது ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி தேவ அழைத்தல் விழாவும், 2-ம் தேதி துறவற சபைகள் விழாவும், 3-ம் தேதி ஆசிரியர்கள் விழாவும், 4-ம் தேதி பக்தியில் மலரும் குடும்ப விழாவும், 5-ம் தேதி இளைஞர்கள் விழாவும், 6-ம் தேதி நலம் பெறும் விழாவும் என ஒவ்வொரு நாளும் விழாக்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னை வேளாங்கண்ணி மாதா தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்பவனிக்கு உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கினார்.
இதில் அன்னை வேளாங்கண்ணி மாதா சிலை அலங்கரிக்கப்பட்ட மின்விளக்கு ரதத்தில் பெசன்ட் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் வலம் வந்தது. இதை வழிநெடுக எங்கிலும் கூடியிருந்த திரளான பக்தர்கள் கண்டு அன்னை வேளாங்கண்ணி மாதாவின் ஆசீர் பெற்றனர்.
விழாவின் நிறைவு நாளான நேற்று திங்கட்கிழமை அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா மற்றும் அன்னைக்கு முடிசூட்டு விழாவும், அதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு கொடி இறக்கு விழாவும் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications