ஆத்திரத்தால் அவசரம்: டிராவல்ஸ் அதிபர் கண்முன்னே மனைவி, 2 மகள்கள் காரோடு குளத்தில் மூழ்கி சாவு
சென்னை: பஸ் டிரைவரிடம் சண்டை போடுவதற்காக டிராவல்ஸ் நிறுவன அதிபர் காரை விட்டு இறங்கி சென்றபோது, கார் தானாக ஓடி குளத்தில் விழுந்து மூழ்கியது. இதில் டிராவல்ஸ் நிறுவன அதிபரின் மனைவியும், இரு மகள்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையின் புறநகரான சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் பாண்டியன் (48). நேற்று முன்தினம் இரவு, பாண்டியன் தனது மனைவி வெண்ணிலா (38), மகள்கள் ரம்யா (20), பவித்ரா (17) ஆகியோருடன், திருவான்மியூரில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, நள்ளிரவில் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது காரில் பெட்ரோல் இல்லாதை கவனித்து மீண்டும் காரை திருப்பிக்கொண்டு கொட்டிவாக்கம் நோக்கி சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த பஸ் ஒன்று கார் மீது மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன், காரை விட்டு இறங்கி பஸ் டிரைவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பாண்டியன் காரை விட்டு இறங்கும்போது, ஹேண்ட் பிரேக்கை போடவில்லை என்று தெரிகிறது. இதனால், அந்த திடீரென நகர்ந்து சென்று சாலையோரம் இருந்த குளத்துக்குள் பாய்ந்துவிட்டது. இதை பார்த்த பாண்டியன், காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என கூச்சலிட்டுள்ளார். ஆனால், அந்த பஸ் டிரைவரோ பஸ்சை கிளப்பி சென்றுவிட்டாராம்.
பாண்டியனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், குளத்தில் மூழ்கிய காரை வெளியே எடுத்தனர்.
ஆனால் காருக்குள் இருந்த மூவரையும் காப்பாற்ற முடியவில்லை. தனது ஆத்திரத்தால், கண் முன்னாடியே தனது மொத்த குடும்பத்தையும் இழந்துவிட்டோமே என்று பாண்டியன் கதறி அழுதுள்ளார்.
ரம்யா, தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். பவித்ரா, தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.