திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. "அரோகரா" முழக்கத்தோடு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெற்றதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றதை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 31ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து, 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்றது.

கந்தசஷ்டி விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். பக்தர்கள் கோவில் வளாகம், மண்டபங்கள், விடுதிகளில் தங்கியிருந்து வழிபாடு செய்தனர்.

முன்னதாக இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. இன்று காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாரதனை நடைபெற்றது. மாலை 4.35 மணிக்கு கடற்தரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
இதை தொடர்ந்து சந்தோச மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு தீபாரதனை நடக்கிறது. அதன் பின்னர் சுவாமியும், அம்பாளும் சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதியை வலம் வந்து 108 மகாதேவர் சன்னதியை அடைந்தனர்.

இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு ஊர்கள், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். பாத யாத்திரையாக பக்தர்களும் வந்தனர்.

சூரசம்ஹாரத்திற்கு திருச்செந்தூர் வரும் வாகனங்கள் வீரபாண்டியன் பட்டணம் அருகே ஜேஜே நகர் தற்காலிக வாகன நிறுத்துமிடத்திலும், நெல்லையில் இருந்து வரும் வாகனங்கள் திருச்செந்தூர் குமாரபுரம் இசக்கியம்மன் கோவில் அருகிலும், வள்ளியூர், சாத்தான்குளம் வழி தடத்தில் வரும் வாகனங்கள் பரமன்குறிச்சி சாலையில் முருகாபுரம் சந்திப்பு சுடலைமாடசாமி கோயில் அருகிலும், கன்னியாகுமரி மார்க்கத்தில் வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வேலவன் காலனியிலும் நிறுத்தப்பட்டிருந்தது.

சூரசம்ஹாரம் நடைபெற்ற கடற்கரை பகுதியில் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு கம்பு வேலிகள், கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பறக்கும் ஹெலி கேமரா மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கோவில் வளாகத்தில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஷ் மேற்பார்வையில், சுமார் 3 ஆயிரம் போலீசார், ஊர்க்காவல் படையினர், அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications