சபாநாயகர் எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது: தமிழக அரசு வழக்கறிஞர்
எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் தெரிவித்தார்.
சென்னை: சபாநாயகர் எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தமிழக தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் பதில் அளித்துள்ளார்.
முதல்வருக்கு எதிராக ஆளுநரை சந்தித்து ஆதரவை டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றனர். இதற்கு விளக்கம் கோரி சபாநாயகர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
பதில் அளிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை கோரி தினகரன் எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் மீது, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே, நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது கால அவகாசம் தேவைப்படுகிறதா என்பது குறித்து சபாநாயகரிடம் கேட்டறிந்து இன்று மதியம் 2.15 மணிக்கு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் பிற்பகலில் தனது பதிலை தாக்கல் செய்தார். நீதிபதியிடம் அவர் கூறுகையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதிப்பட கூறமுடியாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கிவிட்டது. சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.