ஜெ.வை பாராட்டி தீர்மானம்... வெளிநடப்பு செய்த எதிர்கட்சிகள்
சென்னை: உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீட்டை ஈர்த்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி சட்டசபையில் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியும் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வருக்கு தைரியம் உண்டா? நான் சவால் விடுகிறேன். இந்த சவாலை ஏற்பாரா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாரா? என்று திமுக உறுப்பினர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
பாராட்டிய பன்னீர் செல்வம்
தமிழகத்தில் தொழில் துவங்க மின்சாரம் உட்பட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து உலக தொழில் முதலீட்டாளர்களை முதல்வர் ஈர்த்திருக்கிறார் என்று அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. புதிய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் எண்ணிக்கையிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. என்று முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை ஓ. பன்னீர் செல்வம் பட்டியலிட்டு கூறினார்.
சபாநாயகர் மறுப்பு
அப்போது, துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து பேச வாய்ப்பு கேட்டனர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய பிறகு இறுதியில் வாய்ப்பு தருகிறேன் என்றார்.
நியாயம் இல்லாத செயல்
ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்குப் பின்னால் மற்ற உறுப்பினர்களுக்குப் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை நீங்கள் தருகிறேன் என்று சொன்னதற்குப் பின்னால் வெளிநடப்பு செய்வது என்பது ஒரு சதவீதம்கூட நியாயம் இல்லாத செயல் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
வெளிநடப்பு
திமுக உறுப்பினர் துரைமுருகன் அதை ஏற்கவல்லை. முதலிலேயே பேச வேண்டும். ‘பாய்ண்ட் ஆப் ஆர்டர்' கேட்கிறேன். என்னை பேச அனுமதியுங்கள் என்றார். இதில் சபாநாயகருக்கும், துரைமுருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பேச அனுமதி கிடைக்காததால் அவையில் இருந்து துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெள்ளை அறிக்கை
சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ‘இந்த மாதம் 9, 10ம் தேதிகளில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற்று போல் முதல்வர் பாராட்டும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். நாங்கள் அதை எதிர்த்தோம். ஏனென்றால் ஏற்கனவே இதில் வெள்ளை அறிக்கை வெளியிடும்படி ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம். அதை சபாநாயகர் இதுவரை எடுக்கவில்லை.
சுய விளம்பரம்
வெள்ளை அறிக்கை தரப்பட்டிருந்தால் அதில் விவரங்கள் இருந்திருக்கும். அதை வைத்து விவாதிக்க முடியும். ஆனால் சுய விளம்பரத்துக்காக ரூ.2 கோடியே 42 லட்சத்து 160 கோடி முதலீட்டை ஈர்த்ததாகவும், 4 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததாகவும் முதல்வரை பாராட்டுகிறோம் என்று சொன்னால் அதை எப்படி ஏற்பது. எந்தெந்த கம்பெனி தொழில் தொடங்க வருகிறார்கள். தொழிற் சாலை எந்த ஊரில் அமையும், என்பது போன்ற புரிந்துணர்வு விவரங்கள் எதுவுமே இல்லை.
சவால் விட்ட துரைமுருகன்
வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வருக்கு தைரியம் உண்டா? நான் சவால் விடுகிறேன். இந்த சவாலை ஏற்பாரா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாரா? இது பற்றி சபையில் பேச முற்பட்டால் சபாநாயகர் அனுமதி மறுக்கிறார். அதனால் வெளிநடப்பு செய்தோம்.