பாஜக அணியில் மதிமுக, தேமுதிக, பாமக நீடிக்கிறதா? 26-ந் தேதி இஃப்தார் நோன்பில் கிளைமாக்ஸ்!!
சென்னை: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் மதிமுக, தேமுதிக, பாமக ஆகியவை தொடர்ந்து நீடிக்கிறதா என்பதற்கான வரும் 26-ந் தேதி நடைபெறும் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் பாமக, தேமுதிக, மதிமுகவை இடம்பெற்றிருந்தன. இதில் பாஜக மற்றும் பாமக தலா ஒரு இடத்தில் வென்றன.
கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை
அதே நேரத்தில் தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு எப்படியும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
கூட்டணி கட்சிகள் அதிருப்தி
இதனால் கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு விவகாரத்துக்கும் எதிர்ப்பு
மேலும் முதல் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, கச்சத்தீவு, ஈழப் பிரச்சனை என ஒவ்வொரு விவகாரத்திலும் மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் கூட்டணிக் கட்சிகள் அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. இதனால் இந்த கட்சிகள் பாஜகவுடனான அணியில் நீடிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்தது.
26-ந் தேதி இஃப்தார் நோன்பு
இந்நிலையில் பாஜக அணியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 26-ந் தேதி இஃப்தா நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாஜகவின் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணியின் எதிர்காலம்?
முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இந்த இஃப்தார் நோன்பில் கட்சிகள் கலந்து கொள்வதை முன்வைத்தே பாஜக கூட்டணியின் தற்போதைய நிலைமை என்ன என்று தெரியவரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.