அமித்ஷாவை சந்தித்தது தமிழக பாஜக குழு.. காவிரி குறித்து பேச்சு!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. அதுகுறித்து உத்தரவிட உங்களுக்கு அதிகாரம் இல்லை. அதற்கான அதிகாரவரம்புக்குள் நீங்கள் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டுக்கே அட்வைஸ் கொடுத்து விட்டு தமிழகத்தின் முதுகில் குத்தி விட்டது மத்திய பாஜக அரசு. இந்த நிலையில் இன்று பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளது தமிழக பாஜக தலைவர்கள் குழு.
காவிரி விவகாரத்தில் பாஜக அரசு யாரும் எதிர்பாராத வகையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக திரும்பி விட்டனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சி அடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசு அடித்த பல்டியை சுப்ரீம் கோர்ட்டே எதிர்பார்க்கவில்லை. எப்படிய கை காலில் விழுந்து தனது காரியத்தை சாதித்துக் கொண்டு விட்டது கர்நாடகா.
இந்த முதுகில் குத்திய செயலை நியாயப்படுத்தி தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதிலும் எச். ராஜா கொடுத்த விளக்கம்தான் ரொம்பக் கொடுமையானது.
இந்த நிலையில் பாஜக தலைவர் அமித் ஷாவை இன்று சந்தித்தது தமிழக பாஜக குழு. மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழு இன்று மாலை அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து தமிழக பாஜக தலைவர்கள் அமித் ஷாவுடன் விவாதித்தனர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று திட்டவட்டமாக சுப்ரீ்ம் கோர்ட்டில் தெரிவித்து விட்டது. இந்த நிலையில் அமித்ஷாவைப் பார்த்துள்ள தமிழக பாஜக குழு மக்களுக்கு என்ன செய்தியை கூறப்போகிறது என்று தெரியவில்லை.