எம்எல்ஏக்களின் அடுத்தடுத்த சந்திப்பு...மே 25ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை மே 25ல் கூடுகிறது.
சென்னை : தமிழக முதல்வரை எம்எல்ஏக்கள் குழு குழுவாக சந்தித்த நிலையில் நாளை மறுதினம் பிற்பகல் 3 மணியளவில் அமைச்சரவை கூடுகிறது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த பிப்ரவரி மாதம் பதவியேற்றது முதல் இது வரை 3 முறை அமைச்சரவை கூட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து 4வது முறையாக மே 25ல் அமைச்சரவை கூட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவது, வீட்டுமனைகளுக்கான விலை நிர்ணயம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நேற்று முன்னாள் அமைச்சர்கள் உள்பட 8 பேர் முதல்வரை சந்தித்தனர், இன்றும் 15க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வரை சந்தித்தனர். பரபரப்பான இந்த சூழலில் இன்று டெல்லி செல்லும் முதல்வர் பிரதமர் மோடியை நாளை சந்தித்து விட்டு திரும்பியதும், நாளை மறுதினம் பிற்பகல் 3 மணிக்கு அமைச்சரவை கூட்டப்பட உள்ளது.
அதிமுக அம்மா அணி எம்எல்ஏக்கள் தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்ய அமைச்சர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்தும் விவாதிக்கப்படுவதோடு பிரச்னைகளை சுமூகமாக்க முதல்வர் ஆலோசனை வழங்குவார் என்றும் தெரிகிறது.