சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்... தமிழக முன்னாள் ஆளுநரின் புத்தகத்தின் தகவல்
சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காததற்கு காரணம் என்ன என்பது குறித்து தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: சசிகலாவை ஆட்சி அமைக்க தான் ஏன் அழைக்கவில்லை என்பது குறித்து தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 3 முதல்வர்களை பார்த்த ஒரே ஆளுநர் என்ற பெருமைக்குச் சொந்தகாரர் வித்யாசாகர் ராவ்.
தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை வந்தபோதெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என இல்லாமல் மிகவும் நிதானமாக ஜனநாயகத்துக்கு கட்டுப்பட்டு முடிவுகளை எடுத்திருந்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்த விஷயம் ஜெயலலிதா மறைவு.
அசாதாராண சூழல்
ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வந்தது. முதல்வராக பொறுப்பேற்ற ஓபிஎஸ் நிர்பந்தத்தின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஜெ.சமாதியில் தியானம் செய்த ஓபிஎஸ் அதன் பிறகு தனி அணியாக செயல்பட்டார். 122 எம்எல்ஏக்களை கொண்ட சசிகலா ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து கோரினார். அதேவேளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தருமாறு முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸும் கேட்டுக் கொண்டார். இரு கடிதங்களையும் பெற்றுக் கொண்ட ஆளுநர் மும்பை பறந்தார்.
சசிகலாவுக்கு அழைப்பில்லை
பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு சசிகலாவின் பக்கம் இருந்தபோதிலும் ஆளுநர் சென்னைக்கு வராமலும், ஆட்சி அமைக்க அழைக்காமலும் இருந்தார். இதற்கு சசிகலா தரப்பினர் ஆளுநரை கடுமையாக கடிந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது என அனைத்தும் நாம் அறிந்ததே.
புது ஆளுநர் நியமனம்
தமிழகத்தில் மேலும் அசாதாரண சூழல் நிலவியதை தொடர்ந்து நிரந்தர ஆளுநராக
பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தின் ஆளுநராக இருந்த காலத்தில் தனது முக்கியமான நிகழ்ச்சிகள் குறித்து வித்யாசாகர் ராவ் புத்தகம் எழுதியுள்ளார். அதை சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெற்றுக் கொண்டார்.
மொத்தம் 12 அத்தியாயங்கள்
வித்யாசாகர் எழுதிய முக்கியமான அந்த நாட்கள் என்ற புத்தகத்தில் மொத்தம் 12 அத்தியாயங்கள் உள்ளன. முதல் அத்தியாயத்தில் ஜெயலலிதாவை தன்னை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றது. ஜெயலலிதா முன்னிலையில் வித்யாசாகர் ராவ் பொறுப்பேற்றது ஜெயலலிதா உடனான நட்பு உள்ளிட்டவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2-ஆவது அத்தியாயத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
6-ஆவது அத்தியாயத்தில்...
சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து 6-ஆவது அத்தியாயத்தில் வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தை நிலை நிறுத்தியது என்ற தலைப்பில் உள்ள அந்த அத்தியாயத்தில் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியதை கையாண்ட விதம் குறித்து அவர் கூறியுள்ளார். மேலும் ஓபிஎஸ் ராஜினாமா செய்த நிலையில் அடுத்தவரை ஆட்சி அமைக்க இயலாத சூழலில் அரசியல் சாசனபடி செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.