மது விற்பனை மூலம் தமிழக இளைஞர் சமுதாயத்தை திராவிட அரசுகள் சீரழித்துள்ளன : ராமதாஸ் குற்றச்சாட்டு
மது விற்பனை மூலம் தமிழக இளைஞர் சமுதாயத்தை திராவிட அரசுகள் சீரழித்துள்ளன என்று ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : தமிழக இளைஞர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லாமல் அவர்களை மதுவுக்கு தமிழக அரசு அடிமையாக்கி வைத்திருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட மாநில இளைஞர் கொள்கை அறிக்கையின் படி, தனிநபர் வருமானம் 2023ம் ஆண்டிற்குள் ரூபாய் 4,59,789 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லாமல் வெற்று அறிவிப்புகளால் எதையும் சாதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநில இளைஞர் கொள்கை
மேலும் அந்த அறிக்கையில், தமிழக அரசின் மாநில இளைஞர் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகாயத்தில் கோட்டைக் கட்டுவதைப் போன்று விண்ணை முட்டும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போதிலும், அவற்றை எட்டுவதற்கான எந்த செயல்திட்டமும் இளைஞர் கொள்கையில் இடம்பெறவில்லை. இளைஞர்களை முன்னேற்றுவதற்கான கொள்கை அவர்களை ஏமாற்றும் வகையில் அமைந்திருப்பது கண்டிக்கத்தது.

2023ம் ஆண்டு இலக்கு
2023ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் தனிநபர் வருமானம் மூன்று மடங்காக உயர்த்தப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் ரூ.1,53,263 ஆகும். இதை 2023 ம் ஆண்டில் ரூ.4,59,789 ஆக உயர்த்த வேண்டும் என்பது தான் இலக்காகும். ஒப்பீட்டளவில் பார்த்தால் இது பெரிய இலக்கல்ல. கோவா, தில்லி மாநிலங்களும், சண்டிகர் யூனியன் பிரதேசமும் இந்த இலக்கை நெருங்கிவிட்டன.

திட்டங்களும் இல்லை
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவை இந்த இலக்கை எட்டிவிடும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது எட்ட முடியாத இலக்கல்ல. ஆனால், இதை எட்டுவதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் திறன் தற்போதைய அரசுக்கு இல்லை என்பதே உண்மை.
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 80 லட்சம் இளைஞர்கள், வேலை வாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்யாமல் 70 லட்சம் இளைஞர்கள் என மொத்தம் ஒன்றரை கோடி பேர் வேலையில்லாமல் வாடுகின்றனர். அவர்களுக்கு வேலை வழங்குவதற்கான திட்டங்கள் எதுவும் மாநில இளைஞர் கொள்கையில் அறிவிக்கப்படவில்லை.

முதலீடுகள் கைவிட்டு போயின
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 2001 முதல் 2011 வரையிலான பத்தாண்டுகளில் 8,67,582 பேர் விவசாயத்தை விட்டு வெளியேறி வேறு வேலைகளுக்கு சென்றுள்ளனர். வேலைவாய்ப்புக்காக தமிழக அரசு நம்பியிருக்கும் மற்றொரு துறை வாகன உற்பத்தித்துறை ஆகும். இத்துறையில் கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி முதலீடுகளை பினாமி அரசு இழந்ததால் அந்த முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன.

தமிழகத்தில் மதுவிலக்கு
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் 15 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் இளைஞர்கள் என்றும், இவர்களின் எண்ணிக்கை தமிழக மக்கள் தொகையில் சரிபாதி என்றும் தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. அவர்களில் 40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தினாலே தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு சுமார் 20 விழுக்காடு அதிகரிக்கக் கூடும்.

நாடகமாடும் அரசு
ஆனால், மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்காக ஊரெங்கும் மதுக்கடைகளை திறந்து இளைஞர் சமுதாயத்தை திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் சீரழித்து வருகின்றன. முளைக்கும் செடி மீது வெந்நீரை ஊற்றி விட்டு, அதை தோட்டமாக்கிக் காட்டுகிறேன் என்று கூறுவதைப் போலத் தான் இளைஞர்களை மதுவைக் கொடுத்து சீரழித்து விட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக இளைஞர் கொள்கையை வெளியிடுவதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது பினாமி அரசு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications