ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் தமிழகம் போராட்ட களமாகும்... கட்சிகள், இயக்கங்கள் 'வார்னிங்'
ஆளுநர் ஆய்வு தொடர்ந்தால் அவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் தெரிவித்து உள்ளன.
தஞ்சாவூர் : கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் தொடர்ந்தும் ஆய்வு நடத்தினால் போராட்டம் நடத்தப்படும் என கட்சிகள், இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் தன்னிச்சையாக மாவட்ட அதிகாரத்தில் தலையிடுவது நல்லது அல்ல; மாநில சுயாட்சியை சீண்டும் விவகாரம் என்று பல்வேறு எதிர்கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறர்கள். இன்று திருப்பூர் மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பின் மாவட்ட அதிகாரிகளோடு ஆலோசனை செய்ய இருந்தார் ஆளுநர் பன்வாரிலால்.
இந்நிலையில், ஆளுநர் தொடர்ந்து இதுபோன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டால், அவருக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என்று தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தஞ்சையில் எச்சரித்தார். அதுபோல, வேதாரண்யத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியும், இத்தகைய ஆய்வுகள் தொடர்ந்தால் ஆளுநரை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சித்தலைவர்கள் மற்றும் அரசியல் அமைப்புகளின் தொடர் எதிர்ப்பால் ஆளுநரின் திருப்பூர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஆளுநர் தனது வரம்புக்கு மீறி எந்த செயலும் செய்யவில்லை. ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது நல்லதுதானே. எதற்காக எதிர்கட்சித்தலைவர்கள் இதை எதிர்க்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.