சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தனிக்கவனம்: ஆளுநர் பன்வரிலால் புரோஹித்
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.
சென்னை : சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
2018ம் ஆண்டிற்கான முதல் சட்டசபைக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை துவக்கி வைத்து பேசினார். அதில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை குறிப்பிட்டு பாராட்டி பேசினார்.
ஹார்வார்டு பல்கலைகழகத்திற்கு தமிழ் இருக்கை வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் பாராட்டினார். மேலும், தென்னையிலிருந்து நீரா பானம் தயாரிக்க தமிழக அரசு திட்டம் தயாரித்து உள்ளதாகவும் அது விரைவில் செயல்பாட்டு வரும் என்றும் குறிப்பிட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் வாழ்வுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்றும் பாராட்டுக்குரியது என்றும், அவரின் பெயர் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
கோதாவரி நதி நீரை காவிரி நதியோடு இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல் வழங்கி இருப்பதை தமிழக அரசு சார்பில் வரவேற்பதாகவும், கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி சாலையாக்கும் திட்டத்திற்கு அனுமதி கோரி திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் அதிமுக அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாகவும், பொருளாதார செழுமை, சமூகநீதிக்கான திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை இந்த ஆட்சி தொடங்கு வழங்கும் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.