வெள்ளத்தில் செத்த மனிதர்கள், வாயில்லா ஜீவன்கள் எத்தனை? மியாட்டுக்கு வாய் திறந்த அரசு பதில் சொல்லுமா?
சென்னை: நூறாண்டு காணாத பேரவலத்தை சென்னை பெருநகரம் சந்தித்துள்ளது... இந்தப் பேரவலத்தில் மக்களின் வீடுகள், உடமைகள் மட்டும் அடித்துவரப்படவில்லை... மனிதர்களின் சடலங்கள், கால்நடைகள், குதறிப்போடப்பட்ட மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல்கள் என அனைத்தும் வந்தன... ஆனால் தமிழக அரசு இத்தனை மனித உயிர்கள் பலியானது... இத்தனை கால்நடைகள், வாயில்லா ஜீவன்கள் பலியானது என வாய் திறக்க மறுத்துக் கொண்டிருக்கிறது.

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக வழங்கும் செம்பரம்பாக்கமும் புழல் ஏரியும் அளவுகடந்த நீரை வெளியேற்ற அடையாறும் கூவமும் பொங்கி பிரவாகமெடுத்தது... இதனால் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என ஒட்டுமொத்த சென்னையுமே பேரவலத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது...
வெள்ளம் ஓடி 3 நாட்களாகிவிட்டது... அது வடிவதுதான் எப்ப்போது என தெரியவில்லை? போர்க்கால அடிப்படையில் இயங்கி இருக்க வேண்டிய தமிழக அரசு மயான அமைதி காத்துக் கொண்டிருக்கிறது... இதனால் உணவு, உடை, இருப்பிடத்துக்கு தன்னார்வலர்களிடம் கையேந்தி நிற்கிறார்கள் சென்னைவாசிகள்...

இந்த வெள்ளம் சென்னையின் பெரும்பகுதி மக்களின் நம்பிக்கையை நாசமாக்கியிருக்கிறது... எதிர்காலத்தை அழித்திருக்கிறது... மீட்புப் பணிக்கு வர வேண்டிய அரசு நிர்வாகம் முடங்கிப் போனதால் குடும்பம் குடும்பமாக ஜலசமாதியானார்கள் என ஈரக்குலையை நடுங்க வைக்கும் செய்திகள் வருகின்றன..
சென்னையை உருக்குலைத்த வெள்ளத்தில் மக்களின் உடமைகள் மட்டுமல்ல.. மனித சடலங்கள், கால்நடைகளின் உடலங்கள், மான்களின் உடல்கள் என அனைத்தும் உருண்டோடி வருகின்றன... சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் மட்டும் நேற்று 39 சடலங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சடலங்கள் மீட்கப்பட்டதாக அரசு நிர்வாகம் சொல்கிறது....
ஒட்டுமொத்தமாக வெள்ளம் பலி கொண்டது எத்தனை உயிர்கள் என குறைந்தபட்ச எண்ணிக்கையைக் கூட சொல்ல திராணியற்று கிடக்கிறது ஆளும் அதிமுக அரசு. மியாட் மருத்துவமனையில் செயற்கை சுவாசம் கிடைக்காமல் 14 பேர் பலியானதை மூடி மறைக்க நல்ல அதிகாரி என பெயரெடுத்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அதிகாரியை அனுப்புகிறது தமிழக அரசு.

அவரிடம் வெள்ளத்தால் பலி எத்தனை பேர் என கேட்டால், வருவாய்த்துறையிடம் கணக்கு இருக்கிறது என ஜம்பம் பேசுகிறார்...
மியாட் மருத்துவமனையின் கொடூரம் அம்பலமாகிவிடக் கூடாது என மார்பில் அடித்துக் கொண்டு ஓடிவரும் அரசு அதிகாரிகள், மரித்துப் போன மக்களின் உயிர் எத்தனை என்று குறைந்தபட்ச தோராய கணக்கைக் கூட சொல்ல முடியாமல் மரத்துப் போனது ஏன்? அம்பலமாகிப் போய்விடுமா அரசின் அலட்சியமான கோர முகம்?
அரசின் மவுனம் தொடரட்டும்... மக்களும் உங்களைவிட கனத்த மவுனத்தோடுதான் காத்திருப்பார்கள்...












Click it and Unblock the Notifications