பெரியார் மண்- பெரியாழ்வார் மண்: வெட்டிச் சண்டையை விட்டு விட்டு உருப்படியா ஏதாவது செய்யுங்க!
Recommended Video
சென்னை: வாய்க்கு வக்கனையாக எதுகை மோனையுடன் பேச மட்டுமே தெரிந்திருக்கிறது நமது அரசியல்வாதிகளுக்கு. "இது என்ன மண்" என்று வாய் கிழியப் பேசிக் கொண்டிருக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள். ஆனால் இந்த மண்ணில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உழன்று கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்க ஒரு நாதியும் இல்லை, ஒரு தலைவரும் இல்லை.
தமிழகம் யாருடைய மண் என்பது இப்போது இந்த அரசியல்வாதிகளுக்கு ஒரு பெரும் பிரச்சினை. பெரியார் மண் என்று ஒரு பக்கமும். இல்லை இல்லை இது பெரியாழ்வார் மண் என்று இன்னொரு குரூப்பும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது தமிழை வைத்து. இவர்களுக்குள் நடக்கும் இந்த "தெருவிளையாடல்" வசனங்களை கையைப் பிசைந்தபடி பரிதாபமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அப்பாவி பொது ஜனம்.
அடுத்த வேளை சோற்றுக்கும், அடுத்த நாள் வேலைக்கும் அல்லாடிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த அரசியல்வாதிகளால் ஒரு பைசா கூட புண்ணியமில்லை என்பதுதான் வேதனை. எத்தனை எத்தனை பிரச்சினை.. அதையெல்லாம் விட்டு விட்டு மண்ணைப் போட்டுப் பிறாண்டிக் கொண்டிருக்கிறது இந்தக் கூட்டம்.
பிரச்சினைகளின் பிரளயம்
விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் சிக்கி தவித்துக் கொண்டுள்ளனர். இவர்களுக்காக ரத்தம் சிந்தி உழைக்கும் ஒரு அரசியல் தலைவரைக் கூட பார்க்க முடிவதில்லை. அவர்களுக்கு மனிதர்களை விட மண்தான் முக்கியமாகி விட்டது.
வறண்டு போகும் தமிழகம்
தமிழகத்தின் ஜீவநாடி நதிகள் எல்லாம் வற்றிக் கொண்டுள்ளன. தண்ணீர் தர வேண்டிய அண்டை மாநிலங்கள் நம்மை பிச்சைக்காரர்களை விடவும் கேவலமாக நடத்துகின்றன. இதைத் தட்டிக் கேட்டு தண்ணீர் கொண்டு வரத் துப்பில்லாத அரசியல் தலைவர்கள்தான் ஏராளம் ஏராளம்.. அவர்களுக்கு மனிதர்களை விட மண்தான் முக்கியமாகி விட்டது.
முக்கிய பிரச்சினைகள் கிடப்பில்
மாணவர்களின் நீட் பிரச்சினை, கோடிக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் டாஸ்மாக் பிரச்சினை என எத்தனையோ முக்கியப் பிரச்சினைகளை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு ஒன்றுக்கும் உதவாத மண்ணை வைத்து விளையாடும் இவர்களை என்ன செய்வது. அவர்களுக்கு மனிதர்களை விட மண்தான் முக்கியமாகி விட்டது.
இவர் என்ன செய்தார்
ஒரு தலைவர் பேசியுள்ளார். இது பெரியார் வளர்த்த மண் அல்ல பெரியாழ்வார் வளர்த்த மண். அண்ணா வளர்த்த தமிழ் அல்ல ஆண்டாள் வளர்த்த தமிழ் என்று. அவர்களை விடுங்க, நீங்க எதை வளர்த்தீர்கள் என்று நாம் பதிலுக்குக் கேட்க வேண்டியுள்ளது. இருக்கும் மனிதர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் செயல்தானே நடக்கிறது அவர்கள் தரப்பிலிருந்து. என்ன செய்வது அவர்களுக்கு மனிதர்களை விட மண்தான் முக்கியமாகி விட்டது.
நாத்திகம் ஆத்திகம் மனிதாபிமானம்
நாத்திகம் ஆத்திகம் என்று பேசி சண்டை போடுகிறார்கள். அதையெல்லாம் தூக்கி உடைப்பில் போடுங்கள். முதலில் மனிதாபிமானம் இருக்கிறதா உங்களது அரசியலில். இது எல்லா அரசியல்வாதிகளுக்குமான கேள்வி. குறிப்பிட்ட யாருக்கும் அல்ல. இந்த மக்களுக்காக உருப்படியாக ஏதாவது செய்தீர்களா, நடுத் தெருவில் நாள்தோறும் போராட விட்டதைத் தவிர்த்து நீங்கள் அவர்களுக்கு செய்தது என்ன. என்ன செய்வது அவர்களுக்கு மனிதர்களை விட மண்தான் முக்கியமாகி விட்டது.
இவர் என்ன செய்தார்
அவர் என்ன செய்தார். இவர் என்ன செய்தார் என்றுதான் வாய் கிழியக் கேட்கிறார்கள் இந்தத் தலைவர்கள். மைக்கை முன்னாடி நீட்டி விட்டால் இன்னும் நிறைய கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இவர் என்ன செய்தார்..இவரால் எத்தனை தமிழ்நாட்டவர்களுக்குப் பலன் ஏற்பட்டது. எத்தனை குடும்பங்களுக்கு இவரால் உதவி கிடைத்தது. ஒரு புண்ணாக்கு கணக்கும் இருக்காது. என்ன செய்வது அவர்களுக்கு மனிதர்களை விட மண்தான் முக்கியமாகி விட்டது.
வெட்டிப் பேச்சை விடுங்கப்பா... மக்கள் பாவம்.. முடிஞ்சா ஏதாவது பண்ணுங்க.. இல்லையா.. !