டெல்லியில் ஓங்கும் எடப்பாடி கோஷ்டி 'கை'.. மீண்டும் மோடியை சந்திக்கும் தங்கமணி- ஓபிஎஸ் அண்ட் கோ ஷாக்
அதிமுகவின் இரு அணிகள் பிளவுபட்டு கிடக்கும் நிலையில் அமைச்சர் தங்கமணி 2வது முறையாக பிரதமர் மோடியை நாளை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியை, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நாளை மீண்டும் சந்திக்க உள்ளது ஓபிஎஸ் கோஷ்டியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.,
தமிழகத்தில் தற்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில் ஓபிஎஸ் அணிக்கு டெல்லியின் ஆதரவு இருப்பதாக கருதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி தானும் அந்த ஆதரவை பெற்று ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள், மனுக்கொடுக்கச்சென்ற எம்.பிக்கள், எதிர்க்கட்சி துணைத்தலைவர் மு.க. ஸ்டாலின் என பலரையும் பிரதமர் மோடி சந்திக்க மறுத்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போக, தமிழக அமைச்சர் பி. தங்கமணி மிக சாதாரணமாக பிரதமரை கடந்த வாரம் சந்தித்துவந்தார்.
கடந்த வாரம் நடந்த இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு விமானம் மூலம் டெல்லி பறக்கும் தங்கமணி நாளை மோடியைச் சந்தித்து பூங்கொத்து கொடுக்கவுள்ளார். நடப்பு அரசியல் சூழலில் இந்த சந்திப்பை சாதாரணமாக கருதமுடியாது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
பவர் கேட்கும் மின்சாரத்துறை அமைச்சர்
இரு அணிகளும் இணையவேண்டும் என்பது பிரதமரின், பாரதிய ஜனதாவின் விருப்பமாக உள்ளது. ஆனால், இதை நிறைவேற்ற இடப்பட்ட உத்தரவை ஓ.பி.எஸ் அணி மதிக்கவில்லை. இதனால், சேகர் ரெட்டி வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் ஓ.பி.எஸ் கொண்டுவரப்படுவார் என்ற தகவல் சில தினங்களாக உலா வருகிறது. இதன் பின்னணியில் தங்கமணி - மோடி சந்திப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ, தற்போது மத்திய அரசின் கரிசன பார்வையிலிருந்து ஒ.பி.எஸ் தொலைதூரம் சென்றுவிட்டார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
மீண்டும் சந்திப்பு - காரணம் என்ன?
நாளைக்கு டெல்லி நடக்கும் சந்திப்பில் - கட்சி வளர்ச்சி, கூட்டணி, எதிர்முகாம் அழிப்பு - மூன்று அம்சங்கள் குறித்து விவாதிப்பார் தங்கமணி என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர். இரு அணிகளை சேர்க்க முடியாவிட்டாலும், சசிகலாவை சிறையிலிருந்து மீட்டெடுப்பது குறித்து நிச்சயமாக பேசுவார் என்றும், பாரதிய ஜனதாவுடனான கூட்டணி வியூகம் குறித்தும், ஓ.பி.எஸ் அணியை எப்படி வீழ்த்துவதில் உதவி ஆகிய அம்சங்கள் விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது
நாளை நமதே
நேற்று இலங்கையில் விழாவொன்றில் பேசிய மோடி அதிமுகவின் நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர் குறித்து பாராட்டி பேசியுள்ளார். இதுவும் ஒரு அரசியல் சிக்னல் என்கிறார்கள் அரசியல்வாதிகள். அமைச்சரின் தொடர் சந்திப்பு இதையெல்லாம் பார்க்கும்போது அதிமுக- பாரதிய ஜனதா கூட்டணிக்கு வாய்ப்பு அமையும் என்றே யூகிக்க முடிகிறது. மேலும், ஆட்சியை பிடிப்பதைவிட, சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் எண்ணம். அதற்கு அதிமுக ஒரு கருவியாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மத்திய அரசுடன் இணக்கம்
முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்திக்காத பிரதமர், அமைச்சர் பி.தங்கமணியை இரண்டாவது முறையாக சந்திக்க அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியலில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம், மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் எனவும் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதோடு 40 ஆண்டு கால தமிழக அரசின் வரலாற்றிலேயே முதன் முறையாக மத்திய அரசின் வெற்றியடைந்த திட்டங்கள் குறித்த தகவல்களை சேரிக்குமாறு மாநிலம் முழுவதம் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அனைத்தையும் இந்த சந்திப்புடன் பொருத்திப்பார்க்க கூடியதாக அமைந்துள்ளது.