நமக்கு நாமே.. இது திமுக - எல்லாம் எமக்கே... இது அதிமுக... ஜெயலலிதாவின் "மிஷன் 234"!
சென்னை: தமிழக சட்டச்பைத் தேர்தலில் எத்தனைக் கட்சிகள் கூட்டணியாக வந்தாலும் அதைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு 234 தொகுதிகளையும் அதிமுகவே வெல்லும் என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமாக இறங்கியுள்ளன. வலுவான கூட்டணிக்காக எதிர்க்கட்சிகள் வேண்டாத தெய்வம் இல்லை. போகாத ஊரும் இல்லை.
மறுபக்கம் அதிமுக கவலையே படாமல் தனது பாணியில் நிறுத்தி நிதானமாக அதேசமயம் அழுத்தம் திருத்தமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது. மிஷன் 234 என்ற இலக்கு வகுத்து அதிமுக யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனது இலக்கை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்துள்ளது.

அதிமுக 44
அதிமுகவுக்கு தற்போது 44 வயதாகிறது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்படி விருதுநகரில் நடந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அவரது பேச்சு ஒட்டுமொத்த மாநில அதிமுகவினருக்குமான செய்தியாக அமைந்துள்ளது.

அன்பும் அறிவும், ஆற்றலும்
ஓ.பி.எஸ் பேசுகையில், தந்தை பெரியார் சீர்திருத்த கருத்துக்களை திறம்பட செயலாக்க உழைத்தார். பேரறிஞர் அண்ணா தமிழர்களை தலை நிமிரச் செய்ய பாடுபட்டார். எம்.ஜி.ஆர். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக உழைத்தார். இந்த 3 தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று மக்கள் நலனுக்காகவே பாடுபட்டு வருபவர் ஜெயலலிதா.

ஆலமரமாக விழுது பரப்பி
எம்.ஜி.ஆர். 17.5 லட்சம் உறுப்பினர்களுடன் இந்த கட்சியை விட்டு மறைந்த போது கண்ணிமை போல் கட்சியை கட்டிக்காத்து அதிமுக இனி இருக்காது என்று ஆருடம் சொன்னவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இன்று ஒன்றரை கோடி உறுப்பினர்களுடன் அதிமுகவை ஆலமரமாக விழுது பரப்பி நிலை நிறுத்தி உள்ளவர் ஜெயலலிதா.

தொலைநோக்குப் பார்வை
எம்.ஜி.ஆர். 10 ஆண்டு காலம் முதல்வராக இருந்தார். ஜெயலலிதா 14.5 ஆண்டு காலம் முதல்வராக பதவி வகித்துள்ளார். கடந்த நாலரை ஆண்டுகளில் தொலைநோக்கு திட்டத்தோடு மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட 96 ஆயிரம் கோடி வருமானத்தை மீண்டும் மக்கள் நலனுக்காக செலவிடுபவர் ஜெயலலிதா. மொத்த வருமானத்தில் 48 சதவீதத்தை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளார்.

கணக்கில் கெட்டி
முதல்வர் ஜெயலலிதா கணக்கில் கெட்டிக்காரார். எப்போதும் நூற்றுக்கு நூறு பெறுபவர். உள்ளாட்சி தேர்தலில் 98 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம். கூட்டுறவு தேர்தலில் 100 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம். நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்றோம்.

234 தொகுதிகளும் நமக்கே
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு என்பதற்கு அதிமுக அரசின் சாதனைகளே அத்தாட்சியாக விளங்குவதால் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி. தமிழக சட்டசபையில் எத்தனை கட்சிகள் கூட்டணியுடன் தேர்தலை எதிர்க்கொண்டாலும், அதிமுக தனித்து போட்டியிட்டு 234 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றார் அவர்.

எப்படிப்பட்ட மோதல்
இந்தத் தேர்தல் மிகவும் கடுமையான போட்டி நிரம்பியதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கூட்டணிகள் எப்படி அமையும் என்பதிலும் தெளிவில்லை. இந்த நிலையிலும் அதிமுக தரப்பு 234ம் எமக்கே என்று கூறியிருப்பது வியப்புக்குரியது.

கை கொடுக்குமா இலவசங்கள்
அதிமுக அரசு தான் கொடுத்த இலவசத் திட்டங்களால் வாக்குகளை எளிதாக கவர முடியும் என கணக்குப் போட்டு வருவதாக தெரிகிறது. குறிப்பாக கிராமப்புற மக்களைக் குறி வைத்துக் கொடுக்கப்பட்ட இலவசங்கள், இலவச கம்ப்யூட்டர் போன்றவை கை கொடுக்கும் என அது கணக்குப் போடுகிறதாம்.

வளைத்து வளைத்துப் பிரசாரம்
மேலும் பல்வேறு ஊடக வாயிலாக விதம் விதமான பிரசாரத்தையும் அதிமுகவினர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்த கவலையில் இருக்கும்போது அதிமுக வட்டும் தனித்த பாதையில் போய்க் கொண்டிருப்பது சற்று கவனிப்புக்குரிய ஒன்றுதான்.

நமக்கு நாமே.. எல்லாம் எமக்கே
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்று பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் எல்லாம் எமக்கே என்று அதிமுக அதிரடி காட்டுவது.. சபாஷ் சரியான போட்டி என்று கருத வைக்கிறது.












Click it and Unblock the Notifications