தமிழ்நாட்டு கொடியுடன் சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் இன்று மாலை சேப்பாக்கம் மைதானம் முற்றுகை!
சேப்பாக்கம் மைதானத்தை இன்று மாலை முற்றுகையிடப் போவதாக காவிரி உரிமை மீட்புக்குழு அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை : ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றக்கோரி வலியுறுத்தும் செவி சாய்க்காத ஐபிஎல் நிர்வாகத்திற்கு எதிராக இன்று மாலை தமிழ்நாட்டு கொடியுடன் சேப்பாக்கம் மைதானம் முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவிரி உரிமை மீட்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.
சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் தமிழ்மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் நீர்த்துப்போய் திசை திருப்பப்படும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் ஐபிஎல் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டபிறகும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து நடத்தும் முனைப்பில் ஐபிஎல் நிர்வாகத்தினர் உள்ளனர்.
தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காகத் தமிழகமே ஒற்றைக் குரலெடுத்து போராடிக் கொண்டிருக்கும்போது தமிழகத்தின் தலைநகரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்திட முனைவது தமிழர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் அவமதிக்கிறக் கொடுஞ்செயலாகும். ஆகவே, அதனைத் தடுத்து நிறுத்தித் தமிழர்களின் உணர்வினையும், உள்ளக்குமுறலையும் உலகுக்குத் தெரிவித்திட முனைவது வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
இந்நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் தலைமையில் இன்று மாலை சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் புறக்கணித்து மாலை 6 மணியளவில் தமிழ்நாட்டுக் கொடியேந்தி மாபெரும் மக்கள் திரள் முற்றுகைப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், மருது மக்கள் இயக்கத் தலைவர் முத்துப்பாண்டி உள்ளிட்ட பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
மேலும் இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக நடிகர் சத்தியராஜ், இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, வி.சேகர், தங்கர்பச்சான், சேரன், அமீர், வ.கௌதமன், கரு.பழனியப்பன், சுப்ரமணிய சிவா, ராம், வெற்றிமாறன், நடிகர் ஆரி உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.