தாக்குதல் எதிரொலி - தமிழக கூலித் தொழிலாளர்கள் கேரளா செல்ல போலீஸ் தடை
தேனி: முல்லைப் பெரியாறு அணைத் தீர்ப்பைத் தொடர்ந்து கேரளாவுக்கு கூலி வேலைக்காக சென்ற தமிழகத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அங்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று தமிழக தொழிலாளர்களுக்கு தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது.
இதனால் தமிழக எல்லையையொட்டி கேரளாவில் உள்ள ஏலத் தோட்டங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு சாகுபடி அடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி வெளியிட்ட தீர்ப்பை கண்டித்து கேரளாவில் நேற்று முன்தினம் பந்த் நடத்தினர். அதற்கு முன்பு வேலைக்குப் போன தமிழக தொழிலாளர்களை கேரளத்தவர் தாக்கியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று தோட்டத்தொழிலாளர்கள், கம்பம்மெட்டு வழியாக நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் வேலைக்கு சென்றனர். அவர்களை கம்பம்மெட்டில் தமிழக போலீசார் தடுத்து நிறுத்தி, வேலைக்கு செல்ல வேண்டாம். இடுக்கி மாவட்டத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நிலைமை சீரடைந்த பின், வேலைக்கு செல்லலாம் என்று கூறி திருப்பி அனுப்பினர்.
இதுதொடர்பாக ஏல விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கேட்டபோது இடுக்கி போலீஸ் சூப்பிரண்டிடம் பேசிய பிறகு தான், தொழிலாளர்களை அனுமதிக்க முடியும் என்று தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் கூறியுள்ளார்.
ஏலத்தோட்டங்களில் மழை பெய்து வேலைகள் ஆரம்பிக்க வேண்டிய தருணம். இப்போது வேலை செய்யவில்லை என்றால், சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.