முல்லைப்பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர் மீது தாக்குதல்... பதற்றம்!
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் மதகு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கேரள எம்.எல்.ஏ.வும் அவரது ஆதரவாளர்களும் தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கியதால் கேரளாவில் முதல்வர் தொடங்கி, எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் என அனைவரும் பதற்றமடைந்துள்ளனர்.
கேரளாவின் பீர்மேடு தொகுதி எம்.எல்.ஏ. பிஜிமோள், தனது ஆதரவாளர்கள் சுமார் 30 பேருடன், அதிவிரைவு படகு மூலம் முல்லைப் பெரியாறு அணைக்கு திங்கட்கிழமையன்று இரண்டு முறை சென்று பார்வையிட்டார்.

அப்போது அங்கு அத்துமீறி அணை பகுதியில் நுழைந்த அவர்கள்,கேரளா பத்திரிக்கையாளர்களுடன் வேகமாக மதகு பகுதிக்கு சென்றிருக்கின்றனர். மேலும், அங்குள்ள சில இடங்களை இடித்து சேதப்படுத்தினார்கள்.
இதையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவன் அங்கு செல்லக்கூடாது எனவும், சில இடங்களை இடித்ததையும் தட்டிக்கேட்டதற்கு, ஆத்திரமடைந்த பிஜிமோள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாதவனை தள்ளிவிட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவன், அணை பாதுகாப்பு காவல்துறை இன்ஸ்பெக்டர் பாபுவிடம் முறையிட்டுள்ளார். அதற்கு, இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் 'இது எங்கள் வேலை அல்ல' எனக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாதவன்,
பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு வந்து பேபி அணைப் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்ட அவர்கள்,சேதபடுத்திய சுவரில் தண்ணீர் கசிவது போன்ற காட்சியை படம் பிடித்தாக கூறினார். அணையை சேதப்படுத்தியவர்களை கேரள போலீஸ் தடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். முல்லை பெரியாறு அணையைப் பாதுகாக்க கேரள போலீஸ் அலட்சியம் காட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கேரள பத்திரிக்கையாளர்களின் இந்த அத்துமீறல் தொடர்பாக, மூவர் குழுவிடம் முறையிடப் போவதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டவுள்ள நிலையில், அணை பலவீனமாக உள்ளது என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க கேரளா முயற்சி செய்வதாக முல்லைப் பெரியாறு மீட்புக் குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, அணைக்கு வரும் நீரின் வரத்து குறைந்துள்ளதால், குடிநீர் தேவைக்கான 150 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இதனால் மின்உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications