தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரம் தமிழகத்தில்தான் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு திடீர் நீக்கம்!
சென்னை: தமிழகத்தில் தனியார் மின்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழகத்தில்தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக ட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கை:
2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மிகக் கடுமையான மின் கட்டுப்பாட்டு முறைகள் கொண்டு வரப்பட்டன. உயர் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 விழுக்காடு மின்வெட்டு; குறைவழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 20 விழுக்காடு மின்வெட்டு; இந்த இருசாராருக்கும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 95 விழுக்காடு மின்வெட்டு; வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு பல மணி நேரம் மின் வெட்டு என மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மின்திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மின் திட்டங்கள்; மத்திய அரசு திட்டங்களிலிருந்து நமக்கான பங்கு, நீண்ட கால மற்றும் நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களின் மூலம் பெறப்படும் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 8432.5 மெகாவாட் மின்சாரத்தை நாம் பெற்று வருகிறோம்.
மேலும், அனைவரும் தரமான மின்சாரம் பெறும் வகையில் 15,505 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையங்கள், மின் பாதைகள், மின் மாற்றிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. 7,297 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 79 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் தமிழ் நாட்டில் மின் வெட்டு அறவே இல்லை என்ற நிலை எய்தப்பட்டுள்ளது. தனியரால் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் 1.6.2016 முதல் நீக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் தனி நபர் சராசரி மின் பயன்பாடு 1,010 யூனிட்டுகள் என உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இது 1,280 யூனிட்டுகள் என உயர் அளவாக உள்ளது.
தேர்தல் அறிக்கையில் நான் அளித்த வாக்குறுதியின்படி அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கும், தற்போதுள்ள நடைமுறையில் உள்ள கணக்கீட்டின்படி 100 யூனிட் வரையிலான மின்சாரம் எவ்வித கட்டணமும் இன்றி தற்போது வழங்கப்பட்டு வருகிறது.