முடிஞ்சுது “சம்மர் லீவ்” – தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு!
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கான கோடை விடுமுறை இன்று முடிவடைவதைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுமார் 45 ஆயிரத்து 366 பள்ளிகள் உள்ளன.
2014-15 கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் முடிவடைந்து, கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதி வாக்கில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டன.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோடை விடுமுறை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால், திட்டமிட்டபடி ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
இன்று பள்ளிகள் திறக்கப்படும் வேளையில், இலவச பாடப் புத்தகங்கள், விலை இல்லாத நோட்டுகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கரூரில் மாணவ மாணவியர் உற்சாகம்
கரூர் மாவட்டத்தில் இன்று மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் முதல் நாள் பள்ளிக்குச் சென்றனர்.
முதல் நாளிலேயே விலையில்லா பாடப் புத்தகம், சீருடைகள், பென்சில்கள் உள்ளிட்டவற்றை வழங்க அரசு உத்தரவிட்டிருந்ததால் அரசுப் பள்ளிகளில் இன்று முதல் நாளிலேயே அனைத்தும் வழங்கப்பட்டன.