ராகுல்காந்தியை மத்திய அரசுதான் கண்டுபிடிக்கணும்… ஈ.வி.கே.எஸ் இளங்கோவனில் அசால்ட் பதில்
சென்னை: ராகுல்காந்தி எங்கே போனார் என்பதுதான் இன்றைக்கு நாட்டில் மிகமுக்கியமனா கேள்வியாக இருக்கிறது. ஊடகங்களில் பல்வேறு வகையான ஊக செய்திகள் ராகுல்காந்தியைப் பற்றி வெளியாகி வரும் நிலையில் அவர் வரவேண்டிய நேரத்தில் வருவார் என்பது மட்டுமே காங்கிரஸ் கட்சியினரின் பதிலாக இருக்கிறது.
இதைகேள்வியை தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் கேட்டாலோ, அதை மத்திய அரசுதான் கண்டுபிடிக்கணும் என்று கூறுகிறார் அசால்டாக.
தமிழக அமைச்சர்கள் மீது 1000 கோடி ரூபாய் ஊழல் புகார் தெரிவிப்பதாகட்டும்... அதிரடி பேட்டிகள் தருவதாகட்டும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை மிஞ்ச ஆளில்லை என்றே கூறலாம். சில சமயங்களில் நான் சரியாத்தான் கேள்வி கேட்கிறேனா என்று செய்தியாளர்களையே யோசிக்க வைத்துவிடுவார் இளங்கோவன்.
கடந்த இருதினங்களுக்கு முன்னர் தந்தி டிவியில் அவர் அளித்த பேட்டியிலும் இது எதிரொலித்தது. ராகுல் காந்தி எங்கே? என்று பேட்டி எடுத்த செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அளித்த பதில்கள்.
பாஜக கண்டுபிடிக்கட்டும்
ராகுல் காந்தி எங்கே என்று சாதாரண மக்களுக்கு தெரியாவிட்டால் பரவாயில்லை.. ஆளும் பாஜகாவிற்கே தெரியவில்லையே. அவர் எங்கே என்று பாஜகவினர்தான் கண்டுபிடிக்கவேண்டும். அதை கண்டுபிடிக்க அவர்களுக்கு யோக்யதை இல்லை.
எதுக்கு கண்டுபிடிக்கணும்
ராகுல்காந்தியை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ராகுல்காந்தி எங்கே என்று காங்கிரஸ்காரர்கள் யாராவது கேட்டார்களா?
நாங்க பொறுப்பில்லை
இது மத்திய அரசின் தவறுதான். இந்த நாட்டில் எத்தனையோ பேர் காணாமல் போகிறார்கள். ராகுல்காந்தி மிக முக்கியமான நபர் அவர் மாயமானால் கண்டுபிடிக்கவேண்டியது யாருடைய பொறுப்பு?
எங்களுக்கு கட்டாயம் இல்லை
அவர் எங்கே என்று சொல்லவேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது. காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திக்கு ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்று தெரியும். எங்களுக்கு அது போதும்.
அது அவசியமே இல்லை
எங்களைப் பொறுத்தவரை ராகுல்காந்தி எங்கே இருக்கிறார் என்று தேட வேண்டிய அவசியம் இல்லை. அவர் காங்கிரஸ்காரர்கள் என்றைக்கும் மனதில் நிரந்தரமாக குடியிருக்கிறார்.
எதுக்குத் தெரியணும்
அவர் எங்கே போனார் என்று தெரிந்து கொண்டு நாங்கள் என்னா செய்யப் போகிறோம். ராகுல் காந்தி குளிக்கிறாரா? சாப்பிடுறாரா? என்று தெரிஞ்சுக்கிட்டு நாங்க என்னா செய்யப்போறோம்?என்றார்.
விடாத செய்தியாளர்.
ராகுல்காந்தி எங்கே என்று பல்வேறு விதமாக பல கேள்விகளை கேட்டு அசந்து போனார் செய்தியாளார். அதற்கு சற்றும் அசராத ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடைசியில் ஒரே போடாக மத்திய அரசு மீது தூக்கி பாராத்தைப் போட்டார்.
என்கிட்ட ஏன் கேட்கணும்
நீங்கள் என்னிடம் இந்தக்கேள்வியை கேட்கவேண்டிய அவசியமே இல்லை. இதுபற்றி கேட்கவேண்டிய இடம் டெல்லி. மத்திய அரசை கேளுங்கள் என்றார்.
தலைமைப்பதவி போட்டி
தலைமைப்பதவிக்கான பிரச்சினை எந்த கட்சியில்தான் இல்லை. திமுகவில் இல்லையா? பாஜகவில் இல்லையா? பாரதிய ஜனதா கட்சியில் அத்வானியை கூப்பிட்டு பேசக்கூட வாய்ப்பு தரமால் அமரவைக்கவில்லையா?
பிரியங்காவும் வரட்டுமே
பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் விருப்பம்தான் அதற்காக சோனியா காந்தியோ, ராகுல்காந்தியோ வேண்டாம் என்று சொல்லவில்லையே.
ராகுலை மட்டும் நம்பியில்லை
ராகுல்காந்தியை மட்டுமே நம்பி காங்கிரஸ் இல்லை. அவர் ஊரில் இல்லை என்றால் எதுவுமே நின்று போய்விடவில்லை. மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியிருக்கிறோம் என்றார். இந்த பேட்டி முடியும் வரைக்கும் ராகுல்காந்தி எங்கே என்று மூச்சு கூட விடவில்லை இளங்கோவன். பாவம் அவர் எப்படி சொல்லுவார். ராகுல் காந்தி எங்கே போய் ஒளிந்திருக்கிறார் என்று அவருக்கு மட்டும் எப்படி தெரியும்?