தமிழக காங். தலைவர் ஞானதேசிகன் திடீர் ராஜினாமா - யாருமே மதிக்கவில்லையாம் - அதனால் விலகலாம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் ஒரு கடிதமும் அனுப்பிவைத்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தன்னை யாரும் மதிக்கவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இன்று தனது ராஜினாமா கடிதத்தை அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் இவரை தூக்கி விட்டு வேறு ஒருவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை ஏற்கனவே திட்டமிட்டு வந்தது. ஆனால் இவருக்குப் பதில் நல்ல தலைவராகப் போடுவது என்பதில் பெரும் குழப்பம் ஏற்படவே தாமதமாகி வந்தது. இந்த நிலையில்தான் ஞானதேசிகனே மரியாதையாக விலகி விட்டதாக சொல்கிறார்கள்.
முன்னதாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக்கை நேற்று சந்தித்தார் ஞானதேசிகன். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே மரியாதை இல்லை என்று கூறி ஞானதேசிகன் ராஜினாமா செய்துள்ளதாக சொல்கிறார்கள்.
வாஸ்னிக்கை சந்தித்த பின்னர் நேராக சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலைப் போய்ப் பார்த்து குமுறினாராம் ஞானதேசிகன். அதன் பின்னரே அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், தன்னைப் பதவியிலிருந்து தூக்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் முயற்சித்து வருவதாகவும், அதை முகுல் வாஸ்னிக் ஆதரிப்பதாகவும் அகமது படேலிடம் கூறினாராம் ஞானதேசிகன்.
ஞானதேசிகன் சோனியாவுக்கு அனுப்பிய கடித விவரம்:
சோனியா காந்திக்கு ஞானதேசிகன் அனுப்பியுள்ள கடிதத்தில், கட்சியின் தமிழக தலைவராக 3 ஆண்டுகளாகப் பணியாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் இதற்காக நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
கட்சிக்குள் ஒற்றுமையைக் கொண்டு வர என்னால் ஆன அனைத்தையும் செய்து விட்டேன். பல கூட்டங்களை நடத்தியுள்ளேன். மாவட்ட அளவில் சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டேன். நாடாளுமன்ற ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளேன். கட்சித் தலைமை அலுவலகத்தில் சிறு சிறு கூட்டங்களையும் நடத்தியுள்ளேன்.
மாநில காங்கிரஸ் நிர்வாகத்தை மறு சீரமைக்க வசதியாக, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நான் விலக விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ஞானதேசிகன்.
ஜி.கே.வாசனும் அப்செட்
இதேபோல முன்னாள் மத்திய அமைச்சரும், ஞானதேசிகனின் தலைவருமான ஜி.கே.வாசனும் கூட அப்செட்டில் இருப்பதாக கூறுகிறார்கள். இன்று காலை ஞானதேசிகன் வாசனைச் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். எனவே ஞானதேசிகனைத் தொடர்ந்து வாசனும் பிரச்சினையைக் கிளப்பலாம் என்றும் கூறப்படுகிறது.