தமிழக காங். தலைவர் பதவியில் மாற்றம் இல்லை- திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் இல்லை என்ற டெல்லி அறிவிப்பால் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
சென்னை: மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவிகளில் தொடருவார்கள் என டெல்லி மேலிடம் அறிவித்துள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாநில தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு வழங்கப்பட்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலும் மாற்றம் இருக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவிகளில் தொடர்ந்து நீடிக்க ராகுல் காந்தி முடிவெடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவராக தம்மை தொடர்ந்து பணியாற்ற அனுமதித்த ராகுல் காந்திக்கு நன்றி என்றார்.












Click it and Unblock the Notifications