போலீஸுக்கு பயந்து தேமுதிகவுடன் இணைந்ததாக சொல்லும் பாமக!
சென்னை: பாமக, தேமுதிக இடையே கொள்கை, இலக்கு ஆகியவை வேறுபட்டதாக இருந்தாலும் கூட, தனியாக இருந்தால் அதிமுக போலீஸை ஏவியும், பணத்தை வைத்தும் எங்களை அடக்கி விடும் என்பதால்தான் அக்கட்சியுடன் இணைந்து பாஜக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்தோம் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றதோடு, தேமுதிகவுடனும் சமரசமாகியுள்ளது பாமக. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினார் அன்புமணி ராமதாஸ்.
அதிமுகவுக்குப் பயந்துதான் தேமுதிகவுடன் கை கோர்த்ததாகவும் கூறியுள்ளார் அன்புமணி.அவரது பேட்டியிலிருந்து....
போலீஸை வைத்து அடக்கி விடுவார்கள்
பாமக, தேமுதிக இடையே இலக்கு ரீதியாக, கொள்கை ரீதியாக நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் நாங்கள் தனித்து இருந்தால் அதிமுக தனது பணம் மற்றும் காவல்துறையை ஏவி எங்களை அடக்கி விடும் என்பதால்தான் இணைந்தோம்.
வித்தியாசத்தை மறந்து
எங்களது வித்தியாசத்தை மறந்து தற்போது இணைந்துள்ளோம். எங்களின் ஒரே நோக்கம் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்பதுதான்.
இணைந்து பாடுபடுவோம்
மோடியைப் பிரதமராக்க உழைக்க வேண்டும். இதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.
மக்கள் நம்பிக்கை போய் விட்டது
திமுக, அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றத்தை பாஜக தலைமையிலான தமிழக அணி அளிக்கும்.
25 இடங்களில் வெல்வோம்
தமிழகத்தில் கூட்டணி அமைத்துள்ள பாஜக கூட்டணி 25 இடங்களில் வெல்லும். அதற்காக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றார் அன்புமணி.