நீங்கள் பெண் குழந்தைகளை மதிப்பவரா? அப்படியென்றால் இந்த நாள் உங்களுக்கானது!
சென்னை: நாட்டின் முதல் பெண் பிரதமராக இந்திராகாந்தி பதவியேற்ற தினமான இன்று தேசிய அளவிலான பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
வாழ்க்கையில் பெண்களை மதிக்கும் ஒவ்வொரு ஆணும் மகளிர் தினம், அன்னையர் தினத்திற்கு அடுத்த படியாக கொண்டாட வேண்டிய தினம் இது.
பெண் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரங்கள் குறித்த விழிப்புணர்வினை அனைத்து தரப்பிலும் ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
முதல் பெண் பிரதமர்:
இந்த தினத்தில்தான், 1966 ஆம் ஆண்டு நம் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திராகாந்தி பதவியேற்றார்.
பெண் சிசுக் கொலை:
நம் இந்தியாவைப் பொறுத்தவரை பெண் குழந்தைகளை வளர்ப்பதை பெரும் சுமையாகக் கருதும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பதால் பெண் சிசுக் கொலை பரவி இருந்து வந்தது.
பெண்கள் எண்ணிக்கை கம்மி:
இதன் காரணமாக 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள்தான் இருந்தார்கள். இந்த எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 946 ஆகவும், கிராமப் புறங்களில் சுமார் 900 ஆகவும் இருந்து வந்தது.
கருவிலேயே அழிப்பு:
கடந்த ஆண்டுகளில் ஒரு பாவமும் அறியாத ஒரு கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஒருநாளைக்கு 2000 குழந்தைகள்:
அதாவது தினசரி கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் அழிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பில் தெரிவித்திருக்கிறது.
கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கை:
நம் இந்தியாவில் தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 100க்கு 87 ஆக உள்ளது. அதிலும் 12 ஆம் வகுப்பு வரை செல்பவர்கள் 49 பேர் மட்டுமே என்கிறது ஒரு ஆய்வறிக்கை.. உயர் கல்விக்கும், கல்லூரிக்கும் செல்பவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர்.
பெண் குழந்தைகள் நம் செல்வங்கள்:
பெண் குழந்தைகள் நம்முடைய எதிர்கால சந்ததியினர், ஒவ்வொரு பெண் குழந்தையும்நம் நாட்டின் செல்வங்கள் என்பதால் பெண் குழந்தையை பிறக்க விடுங்கள் என பெற்றோருக்கு இத்தினத்தில் எடுத்து சொல்லப்படுகிறது.
பெண் குழந்தைகளை மதிக்க உறுதிமொழி:
* என் சக பெண்களை நல்ல தோழியர்களாகக் கொள்வேன்.
* என் சக தோழியர்களைக் கண்ணியமாக நடத்துவேன்.
* என் தாய்க்கும், சகோதரிக்கும் கொடுக்கும் அனைத்து மரியாதைகளையும் பெண்களுக்குக் கொடுப்பேன்.
* எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண்களிடம் நடந்து கொள்ள மாட்டேன்.
* பெண்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருக்காலும் ஈடுபடமாட்டேன்.
* பெண்களை நுகர்வுப் பொருளாக நடத்த மாட்டேன்.
* பெண்களின் உணர்வுகளை மதிப்பேன்.
* பெண்மையைப் போற்றுவேன்.
* மானுடத்திற்கான சமத்துவத்தைக் கடைப்பிடிப்பேன்.
* இன்று நான் ஏற்கும் இந்த உறுதிமொழியை என் வாழ்நாள் முழுவதும் காப்பேன்.