கடும் கட்டுப்பாடுகள்.... தலைவிரிகோலமாக நீட் தேர்வுக்கு சென்ற மாணவிகள்!
மருத்துவ மாணவர் சேர்க்கைகான அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் தேர்வானது நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கைகான அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் தேர்வானது நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்றால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இன்று தேர்வு நடைபெற்றது.
நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்வில் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 88,000 பேர் எழுதுகின்றனர். சென்னை, புதுச்சேரி, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 8 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.
ஜூன் 8-இல் முடிவுகள்
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் ஜூன் 8-ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்வுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பெற்றோரிடையே எரிச்சலை கிளப்பியது.
கடும் கட்டுப்பாடுகள்
மூக்குத்தி, ஹேர் பின், கால் கொலுசு, தோடு, ஷூ வடிவிலான செப்பல்கள் உள்ளிட்டவை அணிந்து வரக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவற்றுடன் தேர்வுக்கு வந்த பெண்களை அனுமதிக்காததால் அவர்கள் ஹேர் பின் உள்ளிட்டவற்றை எடுத்து விட்டு தலைவிரி கோலமாகவே வந்தனர்.
பெற்றோர் கலக்கம்
தமிழக கலாசாரத்தை சீரழிக்கும் விதமாகவும், தமிழ் பண்பாட்டை விளக்கும் மூக்குத்தி உள்ளிட்டவை அணியக் கூடாது என்பதாலும் பெற்றோர் கலங்கினர். மேலும் இந்த தேர்வில் வெற்றி பெற்றாலும் தங்கள் பிள்ளைகளுக்கு எந்த மாநிலத்தில் மருத்துவ சேர்க்கை கிடைக்குமோ என்று தெரிவித்தனர்.
சிபிஎஸ்இ பாடம்
மேலும் தமிழகம், புதுச்சேரியை பொருத்தவரை மாணவர்கள் சமச்சீர் கல்வியை படித்ததால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலான தேர்வை எதிர்கொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பொதுவாக படித்துவிட்டு தேர்வுக்கு செல்வர். ஆனால் இந்த தேர்வில்தான் எழுதிவிட்டு பிறகு படிக்க வேண்டிய கட்டாயம் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் அவதி
தமிழக பெண்களை வடமாநில பெண்களை போல் மத்திய அரசு ஆக்கிவிட்டது. ஒரு சில மாணவர்களுக்கு தங்கள் பக்கத்து நகரத்தில் தேர்வு மையம் இருந்தும் வெகு தொலைவில் தேர்வு எழுதும் மையத்தில் ஒதுக்கீடு செய்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.