'அம்மா' பேனரை அகற்றக் கோரி நடுத்தெருவில் படுத்து டிராபிக் ராமசாமி போராட்டம்
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேனர்களை அகற்றக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தினார்.
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை வாயிலில் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் கூடிய 2 பெரிய பச்சை நிற பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை பார்த்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பேனர்களை அகற்றக் கோரி நடுத்தெருவில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தினார்.
அப்போது அந்த வழியாக காரில் சென்ற நடிகர் எஸ். வி. சேகர் ராமசாமியை பார்த்துவிட்டு தனது வாகனத்தை நிறுத்தினார். காரில் இருந்து இறங்கி வந்த அவர் டிராபிக் ராமசாமியின் கையை குலுக்கி தட்டிக் கொடுத்து அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
போலீசார் அங்கு வந்து ராமசாமியை சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. அவரோ பேனர்களை அகற்றுவது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து அந்த 2 பேனர்களையும் அகற்றினார்கள்.
இதையடுத்து தனது போராட்டத்தை கைவிட்ட டிராபிக் ராமசாமி சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.