வர்தா புயல் பாதிப்பு.. சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையில் இருந்து புறப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை: வர்தா புயல் காரணமாக இன்று சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல் - செகந்திராபாத் சார்மினார் விரைவு ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வர்தா புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் ரயில் நிலையங்களும் தப்பவில்லை. புயலின் காரணமாக பெய்த கனமழையில் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் எக்ஸ்பிரஸ், புறநகர், பறக்கும் ரயில்சேவை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் புறநகர் ரயில் சேவை தொடங்கியுள்ளது. மேலும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் புயல் பாதிப்பு காரணமாக சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம், அனந்தபுரி விரைவு ரயில் (16723) இன்று இரவு 7.50 க்கு பதில் 9.10க்கு புறப்படும். சென்னை எழும்பூர் - தூத்துக்குடி (12693) முத்துநகர் விரைவு ரயில் இரவு 7.30க்கு பதில் 10.45க்கு புறப்படும். சென்னை எழும்பூர் - மானாமதுரை சிலம்பு விரைவு ரயில் (16181) இன்று இரவு 8.20க்கு பதில் நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டு - காக்கிநாடா சிர்கர் விரைவு ரயில் (17643) மாலை 4 மணிக்கு பதில் இரவு 8.30 மணிக்கு புறப்படும்.
சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத் விரைவு ரயில் (12603) மாலை 4.45 மணிக்கு பதில் இரவு 9.30 மணிக்கு புறப்படும். சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் (06041) இன்று மாலை 4.30 மணிக்கு பதில் நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனிடையே சென்னை எழும்பூரிலிருந்து காரைக்காலுக்கு இன்று இரவு 11.30 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்கள் ரத்து:
சென்னை சென்ட்ரல் - செகந்திராபாத் சார்மினார் விரைவு ரயில் (12759) மற்றும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் (2261) விரைவு ரயில் ஆகிய இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.