ஏப்ரல் மாதம் காலவரையற்ற பஸ் ஸ்ட்ரைக்.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு
ஏப்ரல் மாதத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சென்னை: ஏப்ரல் மாதத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஊதிய உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும் பிற பண பலன்கள் முழுமையாக கிடைக்க வலியுறுத்தியும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பேருந்து பணிமனைகளில் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 9 மையங்களில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்ப்பதாக உறுதியளித்ததாக தெரிகிறது.

தொடர் போராட்டங்கள்
ஆனால் அமைச்சர் உறுதியளித்தப்படி எதுவும் நடைபெறவில்லை என தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து ஓய்வூப் பெற்ற ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அரசு சார்பில் பேச்சுவார்த்தை
இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாயினர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

வேலைநிறுத்த முடிவு
அப்போது போக்குவரத்துத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆனால் அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை எனத் தெரிகிறது.இதைத்தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது வரும் ஏப்ரல் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

பேச்சுவார்த்தையால் பலனில்லை
ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூட்டாக அறிவித்தனர். வேலை நிறுத்தத்துக்கு முன்னோட்டமாக போக்குவரத்து ஊழியர்கள் நாளை காலை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தேதி பின் அறிவிக்கப்படும்
இதைத்தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கத்தினரும் கூடிப்பேசி வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கும் என்பதால் போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் இந்த வேலைநிறுத்த அறிவிப்பு கோடை விடுமுறையை வெளியூர் சென்று கழிக்க திட்டமிட்டவர்கள் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications