என் ஊரில், என் சொந்த மக்களுக்கு நினைவேந்த எவரின் அனுமதி வேண்டும்? திருமுருகன் காந்தி
ஈழப் போரின் போது மறைந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த யாரும் தடை விதிக்க முடியாது என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
சென்னை: என் ஊரில், என் சொந்த மக்களுக்கு நினைவேந்த எவரின் அனுமதி வேண்டும் எமக்கு என்று மே 17 இயக்கத்தின் நிறுவனம் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
"என் ஊரில், என் சொந்த மக்களுக்கு நினைவேந்த எவரின் அனுமதி வேண்டும் எமக்கு.. மிரட்டல்களுக்கு அஞ்சி பணிந்திட ஆட்டுக்கூட்டமல்ல... புலிகளின் துணிவோடு தமிழர் கடலை மீட்டெடுப்போம்" என்ற தலைப்போடு தனது பேஸ்புக் பக்கத்தில் திருமுருகன் காந்தி பேசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இதோ:
நினைவேந்தல் என்பது இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் ஒரு பண்பாட்ட நிகழ்வு. இது காலம் காலமாக நடந்து வரும் ஒன்று. அதுவும் குறிப்பாக நீர் நிலையோரம் மரியாதை செலுத்துவது தமிழர்களின் மரபு.
ஆதிச்சநல்லூர் சான்று
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிச்சநல்லூரில் இந்த வழக்கம் இருந்ததற்கான சான்று இருக்கிறது. ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றோரம்தான் உள்ளது. அந்த இடம் இறந்தவர்களை புதைக்கும் இடமாகத்தான் இருந்துள்ளது. அப்படிப்பட்ட பண்பாடு நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் உள்ளது.
இயற்கை உரிமை
அந்த அடிப்படையில்தான் ஈழத்தமிழர்களான நம் உறவினர்களுக்கு கடலோரம் அஞ்சலி செலுத்துகிறோம். இதனை எந்த சட்டத்தாலும் தடுத்துவிட முடியாது. ஏனென்றால் இது இயற்கையாக இருக்கக் கூடிய உரிமை இது.
ஐ.நா. உறுதி
இந்த சட்டங்கள் எல்லாம் வருவதற்கு முன்பிருந்த பழக்கமான இதனைத் தடுத்து நிறுத்த முடியாது. பிறப்பின் போது, திருமணத்தின் போது, இறப்பின் போது பின்பற்றப்படும் மரபுகளுக்கு உலகத்தில் உள்ள எந்த சட்டத்திற்கும் உரிமை இல்லை என்று ஐ.நா.வே சொல்லி இருக்கிறது.
ஜெ.விற்கு அஞ்சலி
இன்றும் மெரினாவிற்கு யார் சென்றாலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை பார்க்க முடியும். அப்படித்தான் இந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதிக்கு அனைவரும் சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.
திட்டமிட்ட சதி
ஆக, இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதை தடுப்பதே சட்டவிரோதம். மறைந்த ஈழத்தமிழர்களுக்கு மரியாதை செய்வது தடுக்க திட்டமிட்டப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர் குறித்து தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு அவர்களுக்கு மரியாதை செலுத்துவதை தடுக்கக் கூடாது.
அயோக்கியத்தனம்
போர் நடந்த போது போராடுவதற்கு அனுமதிக்காத அரசு, இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதையும் தடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இது அடிப்படை உரிமை மீறல். இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கிறது?
பாஜக வேலை
பாஜகவும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அரசும் சேர்ந்துதான் தடுக்கும் வேலை செய்து கொண்டிருக்கிறது. இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இது தமிழர்களின் உரிமை. 5000 ஆண்டுகளாக கடற்கரை உள்ளிட்ட நீர்நிலையோரம் மரியாதை செலுத்துவது உரிமை.
சட்ட விதி மீறல்
இனப்படுகொலையை நினைவுபடுத்தி அதற்காக அஞ்சலி செலுத்துவது எங்களது உரிமை. ஈழத்தில் கடற்கரையோரம் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். அதனை தடுத்ததற்காக இலங்கை அரசை ஐ.நா. கண்டித்துள்ளது. அதே வேலையை இங்கு செய்வது சட்டவிதி மீறல் குற்றமாகும்.
பொய்ப் பிரச்சாரம்
எந்தக் கட்சி சார்பும் இல்லாமல் மறைந்த ஈழத்தமிழர்களுக்கு மரியாதை செலுத்த வாருங்கள். பாஜகவின் பொய்ப் பிரச்சாரத்திற்கோ, மாநில அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கோ ஒரு போதும் செவிமடுக்காதீர் என்று திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.