23 வங்கி ஏ.டி.எம்களில் ரூ.1 கோடிக்கும் மேல் கையாடல்- திருச்சியில் ஏ.டி.எம் ஊழியர்கள் கைது
திருச்சி: திருச்சியில் 23 வங்கி ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதில் கிட்டதட்ட ரூபாய் 1 கோடியே 34 லட்சம் மோசடி செய்த ஊழியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் லோடு செய்யும் பணிக்கு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஊழியர்கள் மூலம் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் லோடு செய்யும் பணியை செய்து வருகிறது.
ஏறுக்கு மாறான கணக்கு:
இந்த நிலையில் வங்கி ஏ.டி.எம்களில் பணப்பரிமாற்றம் குறித்து திடீர் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ஏ.டி.எம்.களில் இருக்கும் பணத்திற்கும், வங்கி கணக்கிற்கும் வித்தியாசங்கள் இருப்பது தெரிய வந்தது. ஒரு ஏ.டி.எம் மெஷினில் ரூபாய் 20 லட்சம் இருப்பு இருக்க வேண்டிய நிலையில் ரூபாய் 18 லட்சம் மட்டுமே இருந்தது. வாடிக்கையாளர்கள் எடுக்காத பட்சத்தில் ரூபாய் 2 லட்சம் எப்படி மாயமானது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்தனர்.
அதிர்ச்சி கொடுத்த ஏ.டி.எம்:
அப்போது தான் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் லோடு செய்ய நியமிக்கப்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் நூதன முறையில் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது. திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒரு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூபாய் 37 லட்சம் வரையிலும், புறநகர் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்களில் அதிகபட்சம் ரூபாய் 10 லட்சம் வரை லோடு செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு பணம் லோடு செய்யும் போது ஊழியர்கள் அதில் இருந்து அவ்வப்போது ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை எடுத்துள்ளனர்.
ரூ.1 கோடிக்கும் மேல் கொள்ளை:
அதே போன்று ஏ.டி.எம் எந்திரங்கள் பழுதானால் சரி செய்ய செல்லும் போதும் பணத்தை எடுத்துள்ளனர். இவ்வாறு 3 வருடங்களாக திருச்சி, சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கனரா வங்கி, சிட்டி யூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் 23 ஏ.டி.எம்களில் மொத்தம் ரூபாய் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் எடுத்துள்ளனர்.
ஊழியர்கள் கைது:
இதைதொடர்ந்து தனியார் நிறுவன மேலாளர் அருள்ராஜ் திருச்சி மாநகரக குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர்கள் சேரன், அன்புசெல்வன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் ஊழியர்கள் ஜேம்ஸ், ரவிச்சந்திரன், மூர்த்தி, சதீஷ் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதில் சதீஷ் தவிர மற்ற 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.