ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் எப்போது? டிடிவி தினகரன் பதில்
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வரும் 23ந் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அடுத்த மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. வேட்பு மனுத்தாக்கல் நேற்று துவங்கியது.

ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா தலைமையில் ஒரு அணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் ஒரு அணி என 3 அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் இந்த 3 அணியினரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். மேலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர்.
இதனிடையே இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா தரப்பினரும் ஓபிஎஸ் தரப்பினரும் வரும் 22ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இரட்டை இலை சின்னம் யாருக்கு என அறிவிக்கப்படும்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு ஆவணங்களை அளித்து வெற்றி பெறும். வரும் 23 ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதில் சசிகலா கணவர் நடராஜனுக்கும் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. டிடிவி தினகரன் மேல் அதிருப்தியில் உள்ள திவாகரன், வேட்பாளரை மாற்றியே தீருவேன் என ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார். உட்கட்சி பிரச்சினை ஓபிஎஸ் தரப்பை சமாளித்து டிடிவி தினகரன் கரை சேருவாரா என்பது ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் கையில் உள்ளது.












Click it and Unblock the Notifications