செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம் ... ஹைகோர்ட்டில் தினகரன் தரப்பு வாதம்
செங்கோட்டையனை முதல்வராக்க ஆளுநரிடம் மனு அளித்ததாக 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பினர் வாதத்தை முன்வைத்தனர்.
சென்னை : செங்கோட்டையனை முதல்வராக்க வேண்டும் என விரும்பி தமிழக ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் மனு அளித்ததாக 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பினர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு, டிடிவி தினகரனையும், சசிகலாவையும் ஓரங்கட்டியதால் இவர்களது ஆதரவாளர்கள் 18 பேர் தனித்து செயல்பட்டனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று 18 பேரும் தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியாக மனு அளித்தனர்.

இந்நிலையில் கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறி 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது ஆளுநரிடம் கொடுத்த மனு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்.
எங்கள் மீதான புகார் தொடர்பாக கொறடா, முதல்வரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரப்பட்டது. செங்கோட்டையனை முதல்வராக்க ஆளுநரிடம் மனு அளித்தோம்.
ஆளுநரிடம் மனு அளித்ததை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்துள்ளனர். பல முறைகேடுகளில் சிக்கி இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன் கூறுகையில், 3-இல் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் கூட இல்லாதவர்கள் அதிமுக என உரிமை கோர முடியாது.
கட்சியில் இருந்து பிரிந்து சென்று மற்றொரு குழுவாக செயல்பட்டனர். கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்ததில் தவறே இல்லை என்றார்.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை ஜனவரி 12-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications