ஆட்சியில் தலையிட மாட்டேன்.. கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் தான் அமைச்சர்கள்.. டிடிவி தினகரன் தடாலடி!
முதல்வர் எடப்பாடி அரசில் தலையிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
ஓசூர்: அரசில் தலையிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், கட்சியன் கட்டுப்பாட்டின் கீழே அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ள துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பெங்களூர் சென்றுள்ளார். பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பார்க்கச் சென்றுள்ள தினகரனுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொண்டர்களிடம் சால்வை மற்றும் மனுக்களை பெற்றுக் கொண்ட தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கட்சியை விட்டு தாம் ஒதுங்கினால் இரு அணிகளும் இணையும் என்று அமைச்சர்கள் சிலர் கோரியதாக தெரிவித்தார்.
அஞ்சும் அமைச்சர்கள்
அமைச்சர்கள் சிலர் பயம் காரணமாக சொன்னதால், நானும் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தேன். ஆனால் நான் ஒதுங்கிய பின்னர் வழக்கு காரணமாக சிறை சென்று 45 நாட்கள் ஆகிவிட்டது.
45 நாள் செயல்பாடுகள்
இந்த 45 நாட்களில் கட்சி இணைய எந்த அறிகுறியும் தெரியவில்லை. யாருக்கோ பயந்து அமைச்சர்கள் பிதற்றினார்கள் அதனால் விலகினேன். ஆனால் 45 நாளில் கட்சியில் நடந்த விஷயங்களை அதிமுக பொதுச்செயலாளரிடம் சொல்லி இனி செயல்படும் விதம் குறித்து ஆலோசனை பெற உள்ளேன்.
தொண்டர்கள் வலியுறுத்தல்
சிறையில் இருந்து வந்ததும் டெல்லி, சென்னை விமான நிலையம், அடையாறு வீடு, தற்போது இங்கே என எல்லா இடத்திலும் தொண்டர்கள் என்னை சந்தித்து கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனால் செயல்படாத கட்சயின் பொதுச்செயலாளர் செயல்படாத நிலையில் உள்ளதால் நான் நிச்சயம் கட்சிப்பணியில் தொடர்வேன்.
3 அணியில்லை
அம்மா அணி ஒன்று தான் ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே பயத்தின் காரணமாக செயல்படுகிறார்கள். 3 அணிகளாக செயல்பட என்றுமே அனுமதிக்க மாட்டேன். அதற்கான அனுமதியை பெறவே சின்னம்மாவை சந்திக்க செல்கிறேன், அவர் கூறும் ஆலோசனைப்படி செயல்படுவேன். பயத்தில் உள்ள அமைச்சர்கள் விலகி வருவார்கள் என நம்புகிறேன்.
ஆட்சியில் தலையிட மாட்டேன்
அமைச்சர்கள் கட்சியின் தலைமையின் கீழ் செயல்படுவார்கள், ஆட்சி எடப்பாடி தலைமையில் நடக்கிறது அதை கலைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் என்ன கூறுகிறாரோ அதன்படி தொடர்ந்து கட்சிப் பணி நடைபெறும்.
கட்சி சுதந்திரமாக உள்ளது
கட்சி சுதந்திரமாக செயல்படுகிறது, என்னை பார்க்க வரும் தொண்டர்கள் தானாக கூடியவர்கள் இது தான் சுதந்திரம். இது திரட்டப்பட்ட கூட்டம் கிடையாது. மத்திய அரசின் கைப்பாவையாக அரசு செயல்படுகிறதா என்பது குறித்து முதல்வரும், அமைச்சர்களும் தான் பதில் சொல்ல வேண்டும், என்றும் தினகரன் தெரிவித்தார்.