கொடிபிடிக்கும் கொங்கு அமைச்சர்கள்! தப்பி ஓடும் எம்.எல்.ஏக்கள்.. 'தனிமரமான' தினகரன்!
முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக கொங்கு மண்டல அமைச்சர்கள் கை கோர்த்துள்ள நிலையில் தமக்கு ஆதரவாக ஒரு அமைச்சர் கூட பேசவில்லையே என விரக்தியில் இருக்கிறாராம் தினகரன்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கொங்கு மண்டல அமைச்சர்கள் கை கோர்த்து செயல்படுகின்றனர். ஆனால் தமக்கு ஆதரவாக அமைச்சர்கள் யாரும் குரல் கொடுக்காதது தினகரன் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அ.தி.மு.கவின் இரண்டு கோஷ்டிகளிடையே ஏற்பட்ட இணக்கமான சூழலை தினகரன் தரப்பினர் விரும்பவில்லை. தினகரனுக்கு ஆதரவாக யார் வருகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சசிகலா குடும்பத்துக்கு சட்டப்படி அல்ல, நியாயப்படியே தண்டனை வழங்கும் முடிவில் இருக்கிறது பா.ஜ.க தலைமை என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க ஒன்றிணைவோம் என தம்பிதுரை முதற்கொண்டு, அ.தி.மு.கவின் பெரும்பாலான அமைச்சர்கள் ஓரணியில் அணிவகுத்துள்ளனர். இந்த ஆட்டத்தில், தினகரனைக் கலந்து ஆலோசிக்காமலேயே முடிவெடுக்கிறார்கள். முதல்வர் பதவி உள்பட ஆறு அமைச்சர்களைக் கேட்கிறார் பன்னீர்செல்வம் என ஆவேசப் பேட்டி கொடுத்தார் பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல்.
மவுனிகளான அமைச்சர்கள்
ஆனால், அமைச்சர்கள் பலரும் மௌனமாக இருக்கின்றனர். தினகரனுக்கு விசுவாசிகளாக இருக்கும் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டவர்களே எதுவும் பேசவில்லை. இதனால் தினகரன் தரப்பினர் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர்.
பாஜக அஜெண்டா
தமிழகத்தின் அரசியல் சூழல்களை டெல்லி பா.ஜ.க கவனித்துக் கொண்டு வருகிறது. எடப்பாடி-பன்னீர்செல்வம் கையில் கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பதுதான் நோக்கம். தினகரன் எதிர்ப்பு காட்டினாலும், எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் தரப்பில் பெரும்பான்மை பலம் இருப்பதைக் காரணம் காட்டி, இரட்டை இலை சின்னத்தை அவர்கள் கையில் கொடுக்கும் வேலைகள் தொடங்க இருக்கின்றன.
பதில் தர முயற்சி
இப்படியொரு நடவடிக்கையை பா.ஜ.க எடுக்கலாம் என்பதை அறிந்து, மாவட்ட செயலாளர்கள் மூலம் கட்சி நிர்வாகிகளிடம் அபிடவிட் பெறும் வேலைகளைத் துரிதப்படுத்தினார் தினகரன். முடிந்தால் ஒன்றரை கோடி தொண்டர்களிடமும் கையெழுத்து வாங்கிக் கொடுப்போம். பன்னீர்செல்வத்தால் நமது எண்ணிக்கையை நெருங்கக் கூட முடியாது. உறுதியாக இரட்டை இலை நமக்கு வந்து சேரும் என நம்பிக்கையோடு இருந்தார் தினகரன். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் எட்டு வார கால அவகாசமும் கேட்கப்பட்டது.
கைகோர்த்த கொங்கு
பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேவேளையில், தினகரன் மீது சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்த, சசிகலா குடும்பத்தைக் கழட்டிவிடுவதற்கான வாய்ப்பாக கொங்கு மண்டல அமைச்சர்கள் எடுத்துக் கொண்டனர்.
விரைவில் பொதுத் தேர்தல்
தினகரனைக் கழட்டிவிடும் முடிவுக்கு சில எதிர்ப்புகள் கிளம்புவதால், தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் பன்னீர்செல்வம். அவருடைய பாதையைப் பின்பற்றி நடந்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சி மற்றும் ஆட்சி ஆகிய இரண்டையும் எடப்பாடி-பன்னீர் பக்கம் கொண்டு வருவது பா.ஜ.கவின் முதல்கட்ட திட்டமாக இருக்கிறது. இதற்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கிளம்பினால், விரைவில் பொதுத் தேர்தலைக் கொண்டு வருவதற்கும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
பாஜக ப்ளான்
சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இடங்களை வாங்கிக் கொள்வதும், எம்.பி தேர்தலில் ஐம்பது சதவீத இடங்கள் வரையில் பெற்றுக் கொள்ளும் முடிவில் பா.ஜ.க தலைமை இருக்கிறது. சசிகலா குடும்பத்துக்கு எதிரான மக்கள் கோபத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இருக்கின்றனர். 'இந்தக் கோபம் குறைந்துவிடக் கூடாது' என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதனால்தான், அம்மா மரணத்தில் நியாயம் வேண்டும் எனத் தொடர்ந்து குரல் எழுப்புகிறார் பன்னீர்செல்வம். தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு ஆதரவான கட்சி இருப்பதையும் ஜெயலலிதா செல்வாக்கை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறார் மோடி.
தினகரன் எம்.எல்ஏக்களுக்கு குறி
தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்களை வழிக்குக் கொண்டு வரும் வேலைகளும் தீவிரமடையத் தொடங்கிவிட்டன. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் எத்தனை பேர் சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள்?' என்பதை அறிந்து, அவர்களை வளைக்கும் வேலைகளையும் எடப்பாடி தரப்பினர் தொடங்கிவிட்டார்கள். ஆட்சி அதிகாரத்தை முழுமையாக நாம் நிறைவு செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை விட்டுவிட்டால், இன்னொரு முறை பதவியை நீங்கள் எதிர்பார்ப்பது கடினம். கட்சியும் ஆட்சியும் நம் கையில்தான் இருக்கப் போகிறது' என அவர்கள் மனதைக் கரைக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. திரைமறைவாக நடந்து வந்த காரியங்கள் அனைத்தும் வெளிப்படையாக நடக்கத் தொடங்கிவிட்டதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றனர் சசிகலா உறவுகள் என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.