ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை பாஜக கைகழுவிடுச்சு.. தங்கதமிழ்ச்செல்வன் தடாலடி!
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியை பாஜக கைகழுவிவிட்டதால், இனி அவர்கள் தினகரனிடம் சேர்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜக சொல்லாமலா குருமூர்த்தி ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் மோசமான வார்த்தைகளால் திட்டினார். எனவே பாஜக இவர்களை கைகழுவிவிட்டது உறுதியாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர்கள் தினகரனிடம் வந்து சேர்வதைவிட வேறு வழியில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
டிடிவி. தினகரனின் ஆதரவாளரான தங்கத் தமிழ்ச்செல்வன்,சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : தினகரனை பார்த்து எங்கே எம்எல்ஏக்கள் எழுந்து போய்விடுவார்களோ என்று ஓ.பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் பயம். தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார் என்று பாராட்ட வேண்டும். அதைவிட்டுவிட்டு இன்னமும் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது
கட்சியின் பெயர், சின்னம் என அனைத்தும் இருந்தாலும் தோற்றுப் போய் இருக்கிறார்கள், தோல்வியை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அதிமுகவை வழிநடத்தக் கூடிய தகுதி தினகரனுக்குத்தான் உள்ளது. சமரசமாக என்னென்ன பேசிக்கொண்டு வரவேண்டுமோ, அப்படி வர வேண்டுமேயொழிய இன்னமும் எங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லிக்கொண்டிருந்தால் அது அழகல்ல.

தீர்ப்புக்குப் பிறகு
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வர வேண்டும். அது வந்தபிறகு ஆட்சி மாற்றமா, நிர்வாகி மாற்றமா, அமைச்சரவை மாற்றமா, முதலமைச்சர் மாற்றமா என பல விஷயங்கள் பேசி முடிவெடுக்கப்படும். தீர்ப்பு வந்த பிறகு இவை அனைத்தும் சரசரவென்று வேகமாக சென்று நல்ல முடிவுக்கு வந்துவிடுவோம்.

பாஜகவை பார்த்து பயப்படுகிறார்கள்
பாஜகவுக்கு பயந்தே ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும் எங்களுக்கு எதிர்பாக சென்றுள்ளனர். தங்கள் மீது வழக்கு வந்துவிடும் என்று அவர்களுக்கு பயம். இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவும் டெபாசிட்டை இழந்துவிட்டது. இரட்டை இலை ஓட்டுக்கு 6 ஆயிரம் கொடுத்தும் தோல்வியடைந்துவிட்டது.

தினகரன் தான் ஒரே வழி
துக்ளக் குருமூர்த்தி இவர்கள் இரண்டு பேரையும் மோசமான வார்த்தையில் திட்டியிருக்கிறார் என்றால் பாஜக சொல்லாமல் திட்டியிருக்க மாட்டார். பாஜகவும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். ஆகியோரை கைக்கைழுவிவிட்டது. ஆகையால் இவர்களுக்கு ஆதரவு தினகரன்தான். எங்கள் பக்கம் இவர்கள் வந்துதான் ஆக வேண்டும். வரக்கூடிய நேரம் வந்துகொண்டிருக்கிறது. கனிந்துகொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அந்த நல்ல செய்தி வரும்.

ஆளுநர் ஆய்வு
ஆளுநர் வருகையை எதிர்த்து திமுக போராட்டம் நடத்துகிறது, அதை வரவேற்கிறேன். மாநில சுயாட்சி என ஒன்று இருக்கிறது, அடி பணிந்து போவதற்கும் எல்லை உண்டு. பதவிக்காக யார் காலில் வேண்டுமானாலும் விழலாமா. ஆய்வு செய்வத ஆளுநர் வேலையில்லை, இதனை சரி என்று சொல்லும் அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும் என்றும் தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications