தூத்துக்குடி மாணவி புனிதா கொலை வழக்கு: அக். 20க்கு ஒத்திவைப்பு
தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் அருகே பலத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவி புனிதா கொலை வழக்கு அக் 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தை சேர்ந்த சவுந்திரபாண்டி - இசக்கியம்மாள் தம்பதியரின் மகள் புனிதா. இவர் நாசரேத்தில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20.12.2012ல் பள்ளிக்கு சென்ற புனிதா திடீரென மாயமானார்.
இந்த நிலையில் தாதன்குளம் காட்டு பகுதியில் அவரது உடல் மீட்கப்பட்டது. செய்துங்கநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் புனிதா பாலியல் பலத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக மணியாச்சி அருகே உள்ள பாறை கூட்டத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. 20 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதில் புனிதாவின் தாய், தாத்தா, தோழிகள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர், போலீஸ் அதிகாரிகள், ஆய்வக பரிசோதனை செய்த நிபுணர்கள் என பலர் இடம் பெற்றிருந்தனர்.
தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடைபெற்று வந்தது. 3 கட்டமாக 20 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி பால்துரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக பாளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுப்பையா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி பால்துரை விசாரணை நடத்தி இந்த வழக்கை அக் 20ஆம் தேதி ஒத்தி வைத்தார்.
டெல்லியில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவமாணவி கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் நடைபெற்ற இந்த புனித கொலை வழக்கில் இன்னும் சரியான அளவில் விசாரணையே நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.