மருத்துவமனை மெத்தனம்: மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியவில்லை
தூத்துக்குடி: மூளை சாவு அடைந்த வாலிபரின் இறப்பு சான்று வழங்காமல் அரசு மருத்துவமனை இழுத்தடிப்பதால் அவரின் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் நடுவங்குறிச்சையை சேர்ந்தவர் பாஸ்கர். தையல் தொழிலாளியான அவர் கடந்த 18ம் தேதி மாலை வேலை முடிந்து வீட்டுக்கு நண்பர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் அங்குள்ள பம்பு செட்டில் குளிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் சென்ற பைக் புதியம்புத்தூர்-தட்டம்பாறை விலக்கில் திரும்பிய போது திடீரென நிலை தடுமாறி கவிழந்ததாக கூறப்படுகிறது.
இதில் பாஸ்கரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாஸ்கருக்கு மூளை சாவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
இது குறித்து அவரது சித்தப்பா கூறுகையில்,
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகளை தானம் பெற தயாராக உள்ளனர். ஆனால் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பாஸ்கர் மூளை சாவு அடைந்ததற்கான சான்றிதழை வழங்க மறுக்கிறது. இது குறித்து சரியான வழி முறைகள் தெரியாததால் மருத்துவமனை நிர்வாகத்தினர் சான்றிதழ் வழங்காமல் மறுத்து வருகின்றனர். இதனால் பாஸ்கரின் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர். காலம் கடந்தால் அவரின் உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து யாருக்கும் பயன்படாமல் போய் விடும் என வருத்தத்துடன் தெரிவித்தார்.