அப்பாடா.. "நம்மாளுங்க" மட்டும்தாய்யா.. ரொம்ப நிம்மதி.. 'டென்ஷன்' இல்லாத தூத்துக்குடி போலீஸ்!!!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி இடைத்தேர்தலை திமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளதால் அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் நிம்மதி பெருமூச்சு விட்டு ஹாயாக இருக்கிறார்களாம்.
அதிமுகவும், பாஜகவும் மட்டுமே இங்கு தேர்தலில் களம் கண்டுள்ளன. இதனால் அடிதடி, தகராறு போன்ற தொல்லைகள் குறைவாக இருக்கும் என்ற நிம்மதியில் உள்ளனராம் அதிகாரிகளும், போலீஸாரும்.
தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி பதவிகள் மற்றும் மாநகராட்சியில் காலியாகவுள்ள மேயர் மற்றும் 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கான அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
விறுவிறுப்பு இல்லாத களம்
இந்நிலையில் திமுக, மதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதால் தேர்தல் போட்டிகளத்தில் எந்தவித விறுவிறுப்பும் இல்லை.
அதிமுக பாஜக மட்டுமே
இத்தேர்தலில், அதிமுகவிற்கு போட்டியாக பாஜக வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இந்த இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக இடையே மட்டுமே நேரடியாக கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
தண்ணீரே தராத சசிகலா புஷ்பா
தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை குடிநீர் தட்டுப்பாடு பலவருட காலமாக தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் தருவோம் என்று சொல்லி வெற்றிபெற்ற முன்னாள் மேயர் சசிகலாபுஷ்பா தான் கொடுத்த வாக்குறுதியை 3வருட மேயர் பணிக்காலத்தில் நிறைவேற்றவே இல்லை.
ஒரு வசதியும் செய்யவில்லை சசிகலா!
இதுபோன்று மாநகரில் வாழ்ந்துவரும் மக்களுக்கு தேவையான சாலை, நடைபாதை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இன்றுவரை பூர்த்தி அடையவில்லை. எல்லாம் சசிகலா புஷ்பாவின் "சாதனை"களாக சொல்லப்படுகின்றன.
கட்டணம் உயர்வு
10 நாட்களுக்கு ஒருமுறை மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் சூழலில் குடிநீர் கட்டணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதற்கு திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜெயலலிதா சொன்னதும் நடக்கவில்லை
இதற்கிடையே கடந்த 2011ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் பிரசாரத்திற்காக தூத்துக்குடி வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெருக்கடி தீர வி.வி.டி சிக்னல் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படும், முதல் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை, 2, 4ம் ரயில்வே கேட்டுகளில் மேம்பாலம் அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் புதியதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று மக்களிடத்தில் வாக்குறுதி கொடுத்தார். மாநகராட்சி தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று 3 ஆண்டுகள் கடந்தும் முதல்வர் கொடுத்த இந்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
நல்லவேளை போட்டியில்லை
இதனால் தேர்தலில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து திமுக உள்ளிட்ட பிறகட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் சூழலில் போட்டி கடுமையாக இருக்கும். எதிர்கட்சியினரின் போட்டியை சமாளித்து வெற்றிபெற அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதுடன், தங்களின் அதிகாரபலத்தையும் பலமாக காட்டுவார்கள். இதனால், நமக்குத்தான் பெரிய தலைவலியாக இருக்கும் என்று அரசுத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் பெரும் அச்சம் கொண்டு நிம்மதி இல்லாமல் பரிதவித்து வந்தனர்.
தப்பிச்சோம்டா சாமி!
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுகவை எதிர்த்து பிரதான எதிர்கட்சிகள் போட்டியிடாதது அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளை தப்பித்துக்கொண்டோம் என்று அவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதையும் வெளிப்படையாகவே காணமுடிகிறது.
ஆனா நமக்கு காசு போச்சே...
ஆனால் இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் போட்டியிடாதால் மக்களைக் கவனிக்க மேலிடத்திலிருந்து வரும் காசு நின்று போகும் வாய்ப்பு உள்ளதால், தங்களுக்கு வர வேண்டிய வருமானம் போச்சே என்று அதிமுக நிர்வாகிகள் புலம்பி வருகிறார்களாம்.
ஒவ்வொருவருக்கும் ஒரு பீலிங்.. இன்னா பண்றது!