தூத்துக்குடியில் கோயில் பூசாரி, எஞ்சினியர் வெட்டி கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கோயில் பூசாரியும், எஞ்சினியரும் வெட்டிகொலை செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. ஓய்வு பெற்ற பொறியாளர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி அருகேயுள்ள செய்துங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் கிராமம். செல்லத்துரை சிறிய வயதிலேயே சென்னைக்கு சென்று விட்டார்.
ஓய்வு பெற்ற பிறகு தனது கிராமத்தில் தனது குல தெய்வமான குலை கொண்ட அம்மனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார். வடந்தோறும் வருஷாபிஷேகமும் செய்து வந்தார். பவுர்ணமி தோறும் இந்த கோயிலில் நடக்கும் பூஜையில் அவர் கலந்து கொள்வது வழக்கம்.
வழக்கம் போல் அவர் மாலை 5 மணிக்கு வந்த அவர் அங்கு கோயிலில் வேலை பார்த்து கொண்டிருந்ததா கூறப்படுகிறது. அவருக்கு உதவியாக அந்த கோயிலில் பூசாரியாக இருக்கும் ஆவுடை முத்துசெல்வி இருநதுள்ளார். அப்போது ஒரு கும்பல் கோயிலுக்குள் அதிரடியாக புகுந்தது.
கோயில் கர்ப்ப கிரகத்துக்குள் இருந்த செல்லத்துரையை இழுத்து போட்டு வெட்டியது. இதை பார்த்து தடுக்க ஓடி வந்த ஆவுடைமுத்து செல்வியையும் அந்த கும்பல் வெட்ட முயன்றது. சுதாரித்து கொண்ட அவர் கோயில் கம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து தப்பி ஓட முயன்றார்.
ஆனால் விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல் தோட்டத்துக்குள் வைத்து அவரை சராமரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த செய்துங்கநல்லூர் போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செல்லத்துரையை மீ்ட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். எஸ்பி துரை, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராஜமன்னார், மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தொடர்ந்து முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.