டுவிட்டரில் இனி இரண்டு மடங்கு எழுதலாம் பாஸ்!
டுவிட்டரில் டைப் செய்யும் எழுத்துகளின் எண்ணிக்கையை அந்த நிறுவனம் அதிகரித்துள்ளது.
சென்னை: டுவிட்டரில் எழுத்துகளின் எண்ணிக்கையை 140 வார்த்தைகளில் இருந்து 280 ஆக, அந்த நிறுவனம் அதிகரித்துள்ளது.
சமூக வலை தளங்கள் எனப்படும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்டவைக்கு இளைஞர்கள், பிரபலங்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது. எதிர்ப்புகளாகட்டும், பாராட்டுகளாகட்டும், பரிதாபங்கள் என ஒரு சேர அனைத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகிறது இந்த சமூகவலை தளங்கள்.
தற்போது பேஸ்புக்கில் நாம் அடிக்கும் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு கிடையாது. ஆனால் டுவிட்டரில் 140 எழுத்துகளுக்கு மேல் ஒரு எழுத்தையும் அடிக்க முடியாது. இதனால் மக்கள் தொடர் டுவீட்டுகளை போட்டு வந்தனர்.
டுவிட்டர் நிறுவனம்
இந்நிலையில் அந்த எழுத்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க டுவிட்டர் நிறுவனம் திட்டமிட்டது. அதன்படி சோதனை முன்னோட்டமாக தற்போதுள்ள எழுத்துகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது.
280 எழுத்துகள்
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில் பயனாளிகளின் கருத்துகள் மேலும் உணர்ச்சிகரமாக ஆக்குவதற்கு டுவிட்டரில் டைப் செய்யும் எழுத்துகளின் எண்ணிக்கையை சோதனை ஓட்டமாக அதிகரித்துள்ளோம். அதாவது 140 எழுத்துகளுக்கு பதில் இனி 280 எழுத்துகளை அடிக்கலாம்.
கட்டுப்படுத்த முடியாது
140 எழுத்துகளை மட்டும் டைப் செய்பவர்கள் வெறும் 9 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். மற்ற 91 சதவீத பயனாளிகளின் எண்ணங்களை குறுகிய எழுத்து கட்டுப்பாட்டுக்குள் அடக்க முயற்சிப்பது மிகவும் கடினம். ஆங்கிலம், தமிழ் மட்டுமல்லாது ஜப்பான், சீன மற்றும் கொரிய மொழிகளில் டைப் செய்யும் எழுத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளோம்.
ஆசிய மொழிகள்
பொதுவாக ஜப்பான் மொழியின் டுவிட்டுகள் சராசரியாக 15 எழுத்துகளே இருக்கும். வெறும் 0.4 சதவீதம் பேரே 140 எழுத்துகளை பயன்படுத்துவர். மற்ற ஆசிய மொழிகளின் எழுத்துகள் டைப் செய்யும் எண்ணிக்கையையும் அதிகரிக்க நிறுவனம் முயற்சித்து வருகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.