சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் 2 குழந்தைகள் சாவு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று மாலையில் மேலும் 2 பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சேலத்தில் கடந்த 2 வாரங்களில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவு வார்டில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களில் 13 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மருத்துவ உயர் அதிகாரிகள் சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு வார்டில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை டீன் மோகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்-ராஜேஸ்வரி தம்பதிக்கு கடந்த 19ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. உடல் எடை குறைவாக இருந்ததாக கூறப்படும் இந்த குழந்தை நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த தீர்த்தமலை பகுதியை சேர்ந்த விவசாயி முரளி-நதியா தம்பதிக்கு கடந்த 29 நாட்களுக்கு முன்பு அங்குள்ள அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து பெற்றோர் சிகிச்சைக்காக குழந்தையை அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல்சிகிச்சைக்காக நேற்று மாலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த குழந்தையை டாக்டர்கள் பச்சிளம் குழந்தைகள் பிரிவு வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இரவில் பரிதாபமாக உயிரிழந்தது.
சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று மட்டும் 2 குழந்தைகள் இறந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2 வாரங்களில் சேலத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி 6 குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து 4 தினங்களில் 12 குழந்தைகள் உயிரிழந்த காரணத்தினால் தமிழகம் முழுவதும் பரபரப்பு பற்றிக்கொண்டது. தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த ஞாயிறுமாலையில் மேலும் ஒரு குழந்தை உயிரிழந்தது. இதன் மூலம் சேலம், தருமபுரி அரசு மருத்துவமனைகளில் கடந்த 2 வாரத்தில் 28 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.