நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு.. துண்டு பிரசரம் கொடுத்த 2 பெண்கள் சேலத்தில் கைது
சேலம்: நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக துண்டு பிரசரம் விநியோகம் செய்த 2 பெண்களை போலீசார் சேலத்தில் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்த நிலங்களைக் கையகப்படுத்தி, குழாய்களை பதித்து வருகிறது.

மத்திய அரசின் இத்திட்டத்தால் விவசாயம் அழிந்து விடும், நிலத்தடி நீர் மாசடைந்து அங்கு வாழ்வதே கேள்விக்குறியாகி விடும் என கூறி அக்கிராமத்தைச் சார்ந்த மக்கள் இரண்டாம் கட்டமாக, 90 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் கிராமங்களில் அதிகரித்துவரும் போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்போம்... இயற்கையைக் காப்போம் என்ற வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை கல்லூரி வாசல்களில் விநியோகித்து வந்ததாக கூறி வளர்மதி மற்றும் ஜெயந்தி ஆகிய இரண்டு பெண்களை சேலத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் மாவோயிஸ்டுகள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அரசுக்கு எதிராக கலகம் செய்ததாக இருவர் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது இருவரும் சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications