உடுமலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலை முயற்சி
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆணவக் கொலை கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷம் குடித்த கவுசல்யாவிற்கு உடுமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அபாய கட்டத்தை தாண்டியதை அடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் கவுசல்யா.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்ற தலித் இளைஞர், பழனியை சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த கவுசல்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்திற்கு கவுசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த மார்ச் 13ம் தேதி உடுமலையில் உள்ள ஜவுளிக்கடைக்கு வந்த சங்கரும் கவுசல்யாவும் பட்டப்பகலில் நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் ஆணவ கொலைவெறி கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டனர். இதில் படுகாயமடைந்த சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையில் வெட்டுப்பட்ட கவுசல்யா, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் சங்கரின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றார்.
சங்கர் படுகொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த உடுமலைபேட்டைபோலீசார் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட் சுமி, அவரது உறவினர் மதன், மதனின் கூட்டாளிகளான பழநி- மணிகண்டன், திண்டுக்கல்- ஜெகதீசன், அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார், பட்டிவீரன் பட்டி- மணிகண்டன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, உறவினர் மதன் ஆகியோர் ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி பி.கலையரசன் முன் இரு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சாட்சிகளை கலைத்து விடும் சூழல் உள்ளது. சமூகத்தில் பல்வேறு சாதிப் பிரிவுகள் உள்ளன. இவற்றால் சமூகத்தில் ஒரு விதத் தாக்கம் ஏற்பட்டு வருகின்றன. சமூக நலனைக் கருத்தில் கொண்டு, இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
கவுசல்யா தற்கொலை முயற்சி
உடுமலைப்பேட்டையில் சங்கரின் பெற்றோருடன் வசித்து வந்த கவுசல்யா இன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணை
கவுசல்யாவின் உறவினர்கள் எதுவும் நெருக்கடி கொடுத்தனரா? அல்லது சங்கரின் மரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான கவுசல்யா தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் அனுமதி
இதனிடையே கவுசல்யா ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், முழுவதுமான பரிசோதனைக்கு கோவை மருத்துவமனைக்கு கவுசல்யா அழைத்து செல்லப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜி. ராமகிருஷ்ணன் ஆறுதல்
கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்படடுள்ள கவுசல்யாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். கவுசல்யாவிற்கு கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மன உளைச்சலில் கவுசல்யா
கடந்த இரண்டு நாட்களாக சங்கர் எரிக்கப்பட்ட இடு காட்டிற்கு சென்று புலம்பி அழுது இருக்கிறார். அதிகமான மனவேதனை காரணமாக இந்த முடிவினை எடுத்து இருக்கிறார் கவுசல்யா. இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
சங்கரின் வீட்டில் கவுசல்யா
சங்கரின் அப்பா மற்றும் இரண்டு தம்பிகளுடன் கவுசல்யா வசித்து வருகிறார். ஒரே ஒரு அறையை கொண்ட வீடு.அனைவரும் ஒன்றாக படுக்க முடியாது. ஆகவே அப்பாவும் தம்பிகளும் உறவினர் வீட்டில் உறங்க கவுசல்யா உறவினர் பெண்ணுடன் அந்த வீட்டில் உறங்கி வந்து இருக்கிறார்.
சாணி பவுடரை குடித்தார்
தான் தனியாக படுத்து கொள்ள எந்த சிரமமும் இல்லை. நீ உன் வீட்டுக்கு போ என்று கூறி விட்டு உறவுக்கார பெண்ணிடம் கூறிய கவுசல்யா, சாணி பவுடரை கரைத்து குடித்து இருக்கிறார் கவுசல்யா. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக எவிடென்ஸ் கதிர் கூறியுள்ளார்.
கவுன்சிலிங் தர முடிவு
கவுசல்யாவை சென்னையில் தங்கி படிக்கவைக்க முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் அப்பகுதியை விட்டு வர கவுசல்யா மறுப்பதாகவும் கதிர் கூறியுள்ளார். ஒரு பக்கம் வழக்கு.மறுபக்கம் கவுன்சலிங் படிப்பு என்று பல மறுவாழ்வு பணிகள் கொண்டு செல்லப்பட வேண்டி இருப்பதாகவும் இந்த நிலையில் கவுசல்யா இது போன்ற முடிவு எடுப்பது வேதனையை தருகிறது எவிடென்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.