உளுந்தூர்பேட்டை: 90 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரி..சடலமாக உடல் மீட்பு
உளுந்தூர்பேட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி: உளுந்தூர் பேட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரியின் உடல் இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது. கல்லூரியில் படித்து வந்த மாணவிக்கு கிணறு எமனாகிப் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பெண்ணின் பெயர் கவுசல்யா என்பதாகும். இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கன்னியாஸ்திரி பயிற்சி முடித்துவிட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் முதலாமாண்டு சேர்ந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை மதியம் வகுப்பு முடித்துவிட்டு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதிக்கு வந்த கவுசல்யா, அருகில் உள்ள விவசாய நிலத்தில் மஞ்சள் அறுவடை பணிகளை பார்த்த பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் சென்று அந்த சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்து விட்டு சிறிது நேரம் விளையாடினார்.

கிணற்றில் விழுந்த கவுசல்யா
விடுதிக்குச் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து விட்டு ஓடிவந்து சத்தம் போட்டனர். தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் நேற்று மதியத்தில் இருந்து கௌசல்யாவின் உடலை தேடிவந்தனர்.

90 அடி ஆழ கிணறு
90 அடி ஆழ கிணற்றில் முழுமையாக தண்ணீர் இருந்ததால் அவரது உடலை கண்டு பிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது நேற்று மாலை 7 மணிக்குமேல் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக கவுசல்யாவின் உடலை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

உடலை தேடும் பணி
இன்று காலையில் ராட்சத குழாய்கள் மூலம் 3 விவசாய நீர்மூழ்கி மோட்டார்களை பயன்படுத்தி விடிய விடிய கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் இன்று காலை கவுசல்யாவின் உடல் கிணற்றில் ஊறிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

உடல் மீட்பு
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இருந்த கவுசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கன்னியாஸ்திரி கவுசல்யாவின் எதிர்பாராத மரணம் கல்லூரி மாணவிகளிடையேயும், பெற்றோர்கள், உறவினர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications