4வது நாளாக நீடிக்கும் உண்ணாவிரதம்.. சுங்கச்சாவடி ஊழியர்களின் உடல்நலம் பாதிப்பு - என்னதான் தீர்வு?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில், தொழிலாளர்களை திடீரென பணிநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சக ஊழியர்கள் 8-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் 4வது நாளாக நீடித்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைகளில் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியிலும் ஃபாஸ்டேக் நடைமுறைக்கு வந்ததால், ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைகளை சுங்கச்சாவடி நிர்வாகம் மேற்கொண்டது.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்!
ஊழியர்கள் பணி நீக்கம்
அதன்படி, முதல்கட்டமாக, சுங்கச்சாவடியில் பல ஆண்டுகளாக பணியாற்றிய 28 ஊழியர்கள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து, சுங்கச்சாவடியில் பணிபுரியும் சக ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர், கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், சுங்கச்சாவடியில் உள்ள வசூல் மையங்களை பூட்டிவிட்டு நிர்வாக அலுலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டணமில்லாமல் பயணம்
சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக கடந்து சென்றன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியில் அமைந்துள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பணம் செலுத்தாமல் பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டது.
பூட்டு உடைப்பு
இதனையடுத்து, அவர்களுடன் காவல்துறை மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவித உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி தேதி இரவு, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, வசூல் மையங்களின் பூட்டை உடைத்து, ஃபாஸ்டேக் குறியீட்டு எண்ணை ஆன் செய்து வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை செயல்படுத்தினர்.
உண்ணாவிரதம்
இதனை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த ஊழியர்கள், தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். அதன்படி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம், இன்று 4வது நாளாக நீடிக்கிறது.
உடல் நலம் பாதிப்பு
கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். நேற்று ஊழியர் ஒருவர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அவர் உடடினடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அரசுக்கு கோரிக்கை
சுங்கச்சாவடி தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தற்போது சுங்கச்சாவடி தொழிலாளர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக, அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, அவர்களுடன் பேசி, தீர்வு காண வேண்டும் என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.